கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்
கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்
தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்
தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்
உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விழித்து விட்டேன்
0 comments:
கருத்துரையிடுக