இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 21 நவம்பர், 2011

விடுதலை ஒரு இனத்தின் கனவு

திங்கள், 21 நவம்பர், 2011 0

அகமும் முகமும் புதைந்த

உருவற்ற வெளியின் சிதைவுகளில்

எனக்கான விடுதலையையும்

எனக்கான சுதந்திரத்தையும்

பாடல்களில் இசைக்கிறேன்

பேய்கள் சிதைத்த நிலத்திலிருந்தும்

கொலையுண்ட கல்லறைகளிலிருந்தும்

எனது பிரகடனத்தின் சொற்கள் எழுகின்றன

துரத்தப்பட்ட ஊரின் குழந்தைகள்

அந்தச்சொற்களை உச்சரிக்கிறார்கள்

கசிகின்ற முதுகண்களில்

அந்த சொற்கள் உறைகின்றன

எரிந்த நிலமெங்கிலும் அலைவுறும் ஆன்மாக்கள்

இன்னுமின்னுமாய் அதே சொற்களை ஆர்ப்பரிக்கின்றன

நிலமெங்கிலும் பேய்கள் பெருநடம் புரிகையில்

பசியில் அலையும் கொடுமிருகம்

மண்ணை தின்னத்தின்ன

மரத்தில் இருந்தும் மலைமுகட்டில் இருந்தும்

எனது சொற்கள் உதிர்கின்றன

மூடப்பட்ட பதுங்கு குழிகளுள்

மூடாது விரிந்த விழிகளின் பார்வை

உறையும் புள்ளிகளெங்கிலும்

விடுதலையின் சொற்கள் அழுகின்ற சத்தத்தில்

குழந்தைகள் அரண்டெழுகிறார்கள்

விடுதலை பிரபஞ்சத்தை உடைக்கிறது

விடுதலை கண்ணீரிலும் உதிரத்திலும்

உயிர்க்கிறது

விடுதலை ஒரு இனத்தின் கனவு

விடுதலை உடைத்துயரும் வீரத்தின் விலை

விடுதலை ஆனந்தத்தின் உச்சம்

விடுதலை ஆன்மாவின் யாத்திரை

விடுதலை ஒரு அறைகூவல்

விடுதலை எப்போதும் அடுக்கப்பட்ட

முன்னோர்களின் சிதைகளிலிருந்தே

எழுவதாயிருக்கிறது

வெள்ளி, 4 நவம்பர், 2011

குழி பூக்கும் காலம்

வெள்ளி, 4 நவம்பர், 2011 0

கொட்டும் மழையில்

கொல்லப்பட்ட நிலமெங்கிலும்

உயிர்க்குழிகள் பூக்கத் தொடங்கையில்

ஆர்ப்பரிப்பற்ற அகழ் வெளியில்

புதைந்த கனவுகளின் வியர்வை

மண்ணில் கசிகிறது

மானம் நிறைந்து குழியில் முளைத்த

காவல் சிலைகள்

நொருங்கிச் சிதறிய துண்டங்கள்

மண்ணில் வீழ்ந்து துடித்த தருணத்தில்

பார்க்க வராத அம்மாவைப் பற்றியும்

பழகி மறந்த உறவைப் பற்றியும்

புலம்பும் வாயின் சொற்கள் உறைந்த

ஆழ் நிலத்தில்

உனதும் எனதும் முகங்களைச் சுமந்து

அவர்கள் அலைகிறார்கள்

உன்னையும் என்னையும் பற்றியே

அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்

சமுத்திரம் உதைக்கும் அலைகள் அள்ளி வரும்

அவர்களின் குளிர்ந்த சொற்கள் நம்மைப்பற்றியதே

புள்ளி தொடாத கோடுகளோடு

நிலத்தின் அடியில் உலவும் அவர்களிடம்

எனதும் உனதும் மீதிக்கதைகளை

யாருரைப்பர்

அடக்கம் செய்யப்படாடாத நமது கல்லறைகளை

எவ்வாறறிவர்

நம் நிச்சயமற்ற வெளிகளை யார் காட்டுவர்

நாறும் நம் சொற்களை அவர்கள் கேட்காதிருக்கட்டும்

நிலத்தின் காயங்கள் மனமெங்கும் குழியாய் எழ

சீழ் படிந்த நம் காயங்களில் கழுகுகள் பசியாறுமுன்

பூக்களற்ற கைகளோடு பறிக்கப்பட்ட

இடர் நிலத்தைக் கடந்து சென்று

வா குழிப்பூக்களைப் பறித்து

தலையில் சூடிக்கொள்வோம்

 
◄Design by Pocket