அலங்கரித்து விட்டபடி
அசையும் அணு யுகத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
உய்ய வழி தேடி மனிதர்கள்…..!
யுகம் யுகமாய் ஒளிரும்
சந்திரன் சூரியன் எல்லாம்
இன்று சாட்டுக்குத்தான்
கால நகர்வில்
இவற்றிலும் மாற்றம் வரும்
மனிதர்கள்
மிருகங்களாய் உருமாறி
வாழ்க்கை நடத்தும் காலம்
அமுலுக்கு வந்துள்ளது
பருவ காலத்தில்
இடம் பெயரும் பறவைகளயாயும்
நீர் நிலை தேடிக்காடு மாறும்
மிருகங்களாயும்
இன்று நிம்மதியாய் ஓரிடத்தில்
வாழ முடியாமல்……!
தம்மைத்தாமே தின்னும்
மிருகத்தனமான மூர்க்கக் குணத்துடன்
அலைகிறது மனிதம்
சன்னங்களின் கைகளில்
செங்கோலும்
இரும்புக் குழல்களிடம்
சிம்மாசனமும் அமைந்திருக்க
வெள்ளை அலரி என
எழுகின்றன அரச மாளிகைகள்
ஊழி முற்றிப் பெருத்துக் கிடப்பதாய்
உணர முடிகிறது எல்லோராலும்
எனினும்
அலரி முழைத்த மாளிகையில்
எருக்கலை முளைக்க
வெள்ளை அரண்மனையில்
பாசி பிடித்து நெரிஞ்சி படர……
ஊழிக்காலம் முடியும் என நேற்று
பத்திரிகையில் படித்தேன்….!
0 comments:
கருத்துரையிடுக