நிழலற்றலையும் காற்றில்
தீயூறித் திரண்ட கனவுத் திரள்
முட்டியலையும் வெளியில்
அவலக் குரல்களின் சூட்டில்
அதிகாலை புலர்கிறது
நினைவுருண்டைகள் உரசும்
புலர்பொழுதொன்றிலிருந்து
இடைவிடாத் தருணங்களில்
இசைத்தெழும் பாடலொன்றில்
நிரம்பாக் கனவுகளை யாரோ
அள்ளிச் செல்கிறார்கள்
அவாவித்தழும் குழந்தைகள்
அள்ளுண்ட கனவுகளிலிருந்து
சுதந்திரத்தைக் கேட்கிறார்கள்
ஆமோத்தித்தலையும் ஆன்மாக்களின்
குரல்களில் உறங்கும் குழந்தைகளின் மீது
கும்மிச் சரிந்து படிகிறது வல்லிருள்
முன்பொரு நாளில்
நரத்துக்கலையும் மரணம் குந்தியிருந்த
சந்துகளிலும் முட்புதர்களிலும்
தொங்கும் வாழ்வின் சிதிலங்களில்
களைப்பற்றுறங்கும் மனிதர்களின் சுவாசம்
பெருந்தீயெனச் சுடுகிறது
உய்த்துணராப் பெருவலியில்
பனித்தெழும் எனது பாடலில்
சுவர்க்கோழிகள் துனுக்குற்றெழுகின்றன
கொலை வெளியில் கனத்துயிர்க்கும்
கருணைச்சொற்களைக் கேட்டபடி
மண்ணை இன்னும் இறுக்கமாய் பிசைகிறார்கள்
எனது குழந்தைகள்
காலச் சல்லடையில் எல்லாமும் சொரிந்துவிட
இன்னும் ஏதோ ஒன்றுக்காய்
சொரியாதிருக்கிறேன் எனது குழந்தைகளுடன்
போர்வையற்றுறங்கும் குழந்தைகளின் முகங்களில்
காலம் தன்னியல்பில் என்னைப் பூசுகிறது
2 comments:
//தொங்கும் வாழ்வின் சிதிலங்களில்
களைப்பற்றுறங்கும் மனிதர்களின் சுவாசம்
பெருந்தீயெனச் சுடுகிறது//
நண்பரே மிகவும் அருமை.
அருமையான கவிதை.
முகப்பு படம் ஓவியமா? புகைப்படமா?
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக