பகல் காட்சிகளைப் புறக்கணித்து
உறங்கும் இரவுகளில்
ஓசைகளற்ற உயிரின் நிசப்தங்களில் ஏறி
வெறிச்சோடிய மனதில் எழும் அதிகாலைக் கனவுகள்
அபத்தங்களைச் சொரிகிறது
மழைக்கோடுகள் மண்ணில் மோதி முறிகின்ற
தடதடக்கும் ஓசையை உதாசினப்படுத்தி உறங்கிய
நேற்றைய அதிகாலையிலும் கனவுக்குள் சஞ்சரித்திருக்கிறேன்
சிவப்பு நிறத்திலான இலைகளையுடைய
போதி மரத்தின் கீழ் சீடர்கள் புடை சூழ
சித்தார்த்தனுடன் இருந்தேன் இல்லையெனில்
அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன்
யாரும் சொற்களற்றிருந்தோம்
சீடர்கள் குருவின் குற்றேவலுக்குக் காத்திருந்தார்கள்
சித்தார்த்தன் உபதேசிக்கத் தொடங்கினான்
பஞ்சமா பாதகம் பற்றியதாகவே அது இருந்திருக்க வேண்டும்
காமத்தை ஒழி என்ற சித்தார்த்தனின் கருத்துக்களுக்கிடையே
வன் புணர்ச்சியில் ஒரு பெண் கதறிக்கொண்டிருந்தாள்
சீடர்களில் ஒருவன் இடையில் எழுந்து சென்றிருந்தான்
சிவப்பு நிறத்திலான போதிமரத்தின் இலைகள்
என் மடிமீது சொரிந்து கொண்டிருந்தது
சித்தார்த்தனின் நீண்ட பிரசங்கம்
பரி நிர்வாணம் பற்றியதாக அமைந்தது
உபதேசத்தின் முடிவில் சீடர்கள் என் ஆடைகளை
உரிந்தனர்
கைகளையும் கண்களையும் கட்டினர்
பரி நிர்வாணம் அடைந்தேன்
அப்போது சித்தார்த்தன் கொல்லாமை பற்றி
உபதேசிக்கத் தொடங்கியிருந்தான்
இலைகளெல்லாம் சொரிந்து விட பரி நிர்வாணமாகியது
போதிமரம்
கனவில் தப்பி விழித்தெழுந்தேன்
காலை ஒன்றுக்காக ஆடைகளை அவிழ்த்து
பரி நிர்வாணத்திற்குள் மூழ்கிக்கொண்டிருந்தது இரவும்.
0 comments:
கருத்துரையிடுக