வெடித்தலறும் துப்பாக்கிகள்
மூச்சடங்கிப் போன எனது தேசத்தில்
மரணம் அடங்காது அலைகிறது
வாய்களை அகலத்திறந்து ஒரு பூனை போல
சத்தமின்றி கால் வைத்து
மரணம் இன்னும் அலைகிறது
கணக்கிட முடியா சனத்திரளை
தன் பேய்க்கரத்தால் கிழித்த பின்னும்
பெரு வயிறு அடங்காப் பசியில்
நிலங்களையும் அது விழுங்குகிறது
திருடப்பட்ட நிலத்தின் சனங்கள் மீது
மரணத்தின் குங்சுகள் ஊர்கின்றன
பறித்த நிலத்தை அவாவும் அப்பழுக்கற்ற
அப்பாவிக் குரல்கள்
அதிகாரக் கால்களில் மிதிபட்டு இறஞ்சுகின்றன
நிலத்தை உச்சரிக்க முடியாது அச்சுறுத்தும் கட்டளைகளில்
தளரும் சொற்கள் உறைகின்ற வெளியில்
மரணம் இன்னும் அலைகிறது
மண்ணை உதட்டில் சுமந்து மூச்சிழந்த
முதுமக்களின் ஆவிகளில் வெளி கனத்தசைய
வருடங்களைச் சுமந்த அகதிக்கொட்டில்களின் தாழ்வாரங்களில்
குழந்தைகள் தோண்டும் குழிகளில் கனவுகள் நிறைகின்றன
அதிகாரத்தின் கைகளால் மிக இலகுவாக
நிலங்களை அள்ள முடிகிறது
அதிகாரத்தின் சொற்களால் ஓரிரு வார்த்தைகளில்
காரணம் சொல்ல முடிகிறது
பாட்டனின் சொத்துக்களைப் புதைத்தும்
பரம்பரைகளை சிதைத்தும்
உரிமைக் காகிதங்களைக் கிழித்தும்
சொல்கின்ற இடங்களில் குந்த வைக்க
அதிகாரத்தால் மிக இலகுவாக முடிகிறது
எனது தேசம் தமிழ் நிலங்களை மட்டுமே
தன் அபிவிருத்திக்கு பிரியம் கொள்கிறது
எனது நிலத்தில் எரியும் நிலக்கரிதான்
மின்சக்தியை அழிக்கக்கூடும்
எனது மண்ணில் மட்டுமே
தொழிற்சாலைகள் முளைக்கலாம்
எனது பாட்டன் நடந்த தெருக்கள்தான் சித்தாத்தன்
அமர சௌகரியமானவை
அனாதைக் குலத்தின் மீது ஆக்ரோசமாய் படரும்
கொடிய காலகள் ஓய்ந்தபாடில்லை
தடுப்பற்ற வெளியெங்கிலும் நீளும்
போதி மரத்தின் வேர்கள்
விசப்பற்களோடு பாம்பாய்த் துரத்துகிறது
படுத்துறங்க பிடிநிலத்தை
பிச்சை கேட்கும் சனங்களின் சத்தத்தை
முள் வேலிகளுக்குள் அடைத்து எச்சரிக்கும் தேசத்தில்
மரணம் இன்னும் அலைகிறது
என்னினத்தில் இங்கொன்றாய் அங்கொன்றாய்
மீந்திருக்கும் சனங்கள் செத்தொளிந்து
வாய்க்குழிக்குள் ஊறுகின்ற தமிழ் எச்சில் ஒரு துளியை
காறி உமிழ நிலமில்லை என்னும்
காலம் உருப்பட்டால் உலகம் சிலவேளை
எனக்கான சுதந்திரத்தை
பிரகடனப்படுத்தக் கூடும்
0 comments:
கருத்துரையிடுக