இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

சாம்பல் படியும் இரவு

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

போர்வைக்குள் வினாக்குறியைப்போல

சுருண்டுகிடக்கும்

என் உடல் சூட்டின் கதகதப்பில்

இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது

நகரம் எரிந்து

காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்

பகலை விடவும் இரவுகளில்தான்

உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன

நாசியில் புகும் துகள்களில் எல்லாம்

எனது தொன்மத்தை நுகர்கிறேன்

அவற்றில் வார்த்தைகளற்ற

பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை

ஒரு சாகரத்தைப் போல

ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன

ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்

ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்

தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்

செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது

கற்குவியல்களுக்குள்

தொலைந்து போன நான்

தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்

காலம் என்னைச் சூதாடியிருக்கிறது

நாடு நகர் தோற்றாயிற்று

பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை

அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை

நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்

இரவும் அப்படியே

நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

கண்ணகி திருகிய முலையில்

இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்

உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்

வேறென்ன செய்ய

எனது நூற்றுக்கணக்கான

பத்தினிப்பெண்களின் மார்புகள்

அறுத்தெறியப்பட்ட போதும்

இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது

எனது தேசத்தில் நெருப்பு

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket