இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011 0

காதல் கசிவுகள் அற்று

பிரியத்தின் நிழலும் படராத

நெருஞ்சி வெளியென்றிருக்கும் என்னில்

நேசிப்புக்குரியவனாகிக் கொண்டிருக்கும்

தூர தேச நண்பனே

பருவகாலப் பெயர்வில் வந்தமரும்

பெயரறியாப் பறவையைப்போல அனுமதியற்று

என்னில் கூடு கட்டியிருக்கிறாய்

தூர்ந்து போன என் தெருக்களை

திரும்பிப்பார்க்கிறேன்

நீ முளைதுக்கொண்டிருக்கிறாய்

நம் தொடர்புக்கான அசாத்தியங்களின்

ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்குள்ளும்

என்னிலும் உன்னிலும் ஓடுகின்ற

ஏதோ ஒரு இழைக்கயிறு

நம்மை பின்னிக்கொண்டிருக்கிறது

நீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு

உன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள

மனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்

நீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்

எனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது

நமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா

நீ விட்டுச்சென்றதைப் போலவே

இன்னும் இருக்கிறது

சில விரும்பத்தகாத ஏற்பாடுகளுடன்

நம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை

நாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து

இன்னும் அவை மீளவில்லை

வெளியில் ஓய்ந்துவிட்ட சத்தங்கள்

மனதில் ஆர்ப்பரிக்கத்தொடங்கியிருக்கிறது

வெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா

மனதால் செத்துக்கொண்டிருப்பது

நிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்

தொலைந்துவிட்டதாய் உணர்கிறேன்

தூரிகையற்ற ஓவியனைப்போல

வெற்றுத்தாள்களில்

என்னை பிரதி செய்ய முயல்கிறேன்

கற்பனைகள் சிதைய சிதைய

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

மீண்டும் கோட்டைகளைக் கட்டுவதில்

மனம் வசப்பட்டிருக்கிறது

உண்பது உறங்குவது இவையே

இன்னும் பறிபோகாமல் இருக்கிறது

எனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி

மூச்செறிந்து இளைப்பாறும் முற்றம்

என எல்லாம் தொலைந்தாயிற்று

முன்பிருந்தவற்றில் எதுவுமில்லை நண்பா

நீச்சலடித்த வில்லுக் குளம்

தூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்

காதல் தேடும் காளி கோயில்

இப்படி எதுவுமில்லை

உன்னைப் போலவே பரிச்சயமாகிவிட்ட

தோழி ஒருத்தி

நான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்

என்னை பரிகசிக்கிறாள்

என் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை

அவளிடம் எப்படி புரியவைக்க

பார்த்தாயா நண்பா

நீ நினைத்தது போல் எதுவுமில்லை

நீ இன்னொரு தேசத்தில் இருந்து

உன் தேசத்தை எண்ணி அழுகிறாய்

நான் எனது தேசத்தில் இருந்தே

அதை எண்ணி அழுகிறேன்

அன்னியக்காற்றை சுவாசிப்பதாய்

நீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்

நான் எனது தேசத்தில் இருந்து கொண்டே

அப்படி உணர்கிறேன்

சாம்பல் படியும் இரவு

போர்வைக்குள் வினாக்குறியைப்போல

சுருண்டுகிடக்கும்

என் உடல் சூட்டின் கதகதப்பில்

இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது

நகரம் எரிந்து

காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்

பகலை விடவும் இரவுகளில்தான்

உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன

நாசியில் புகும் துகள்களில் எல்லாம்

எனது தொன்மத்தை நுகர்கிறேன்

அவற்றில் வார்த்தைகளற்ற

பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை

ஒரு சாகரத்தைப் போல

ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன

ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்

ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்

தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்

செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது

கற்குவியல்களுக்குள்

தொலைந்து போன நான்

தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்

காலம் என்னைச் சூதாடியிருக்கிறது

நாடு நகர் தோற்றாயிற்று

பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை

அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை

நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்

இரவும் அப்படியே

நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

கண்ணகி திருகிய முலையில்

இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்

உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்

வேறென்ன செய்ய

எனது நூற்றுக்கணக்கான

பத்தினிப்பெண்களின் மார்புகள்

அறுத்தெறியப்பட்ட போதும்

இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது

எனது தேசத்தில் நெருப்பு

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011 0

சொல்லாது போன சொற்களை

சேகரிக்கிறது தனிமை

நிலுவையில் இருக்கும்

பாதிச்சொற்களில் பயத்தின் நெடி

இன்னும் மறையவில்லை

மூடியற்ற என் கனவுக் குடுவையினூடு

வழிகின்ற எனது விம்பங்களில்

பரிதாபத்தின் தோரணை

அப்பிக்கிடக்கிறது

பினாத்தல்களின் சுதந்திரத்தில்

லயிக்கிறது மனது

தீராத பக்கங்களில் கலக்கமேதுமற்று

நிரம்பிக் கொண்டிருக்கின்றன

விடயற்ற கேள்விகள்

தீர்வுகளற்ற முடிவுறா

நெடும் பயணத்தின்

சிராய்ப்புத் தழும்புகளில்

மறைந்துகொண்டிருக்கும் எனது

சூரியோதயத்தின் மீது

நம்பிக்கையற்றிருக்கிறது பகல்

தனித்திருத்தலின் சாத்தியம்

அதிகரிக்க அதிகரிக்க

உடலற்று வான வெளிகளில்

நீந்துகிறது உயிர்

ஒவ்வொரு காலையும்

அதே நம்பிக்கயுடன்

நான் ஏந்தும் எனது

பிச்சை பாத்திரத்தின் மீது

விரல் பதிக்க துணிவற்றிருக்கிறார்கள்

சோறூட்டும் போது அம்மா சொன்ன

கதைகளில் வரும் தேவதைகள்

உயரத்தில் பறக்கும்

இனமும் மொழியுமற்ற பறவை ஒன்று

ஆயிரம் விடைகளோடு

உதிர்த்துவிட்டு போகும் இறகுகளில்

நிறைகிறது

தேவதைகளின் கண்களில்

அகப்படாத பிச்சைப் பாத்திரம்

சாம்பல் படியும் இரவு

போர்வைக்குள் வினாக்குறியைப்போல

சுருண்டுகிடக்கும்

என் உடல் சூட்டின் கதகதப்பில்

இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது

நகரம் எரிந்து

காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்

பகலை விடவும் இரவுகளில்தான்

உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன

நாசியில் புகும் துகள்களில் எல்லாம்

எனது தொன்மத்தை நுகர்கிறேன்

அவற்றில் வார்த்தைகளற்ற

பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை

ஒரு சாகரத்தைப் போல

ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன

ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்

ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்

தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்

செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது

கற்குவியல்களுக்குள்

தொலைந்து போன நான்

தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்

காலம் என்னைச் சூதாடியிருக்கிறது

நாடு நகர் தோற்றாயிற்று

பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை

அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை

நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்

இரவும் அப்படியே

நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

கண்ணகி திருகிய முலையில்

இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்

உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்

வேறென்ன செய்ய

எனது நூற்றுக்கணக்கான

பத்தினிப்பெண்களின் மார்புகள்

அறுத்தெறியப்பட்ட போதும்

இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது

எனது தேசத்தில் நெருப்பு

 
◄Design by Pocket