போரின் தீக்காயங்கள்
இன்னும் ஆறாத எங்கள் தழும்புகளில்
நீரின் காயங்கள் சுடுகிறது
பேயென பெய்கிறது வானம்
மனங்களை ஈட்டியின் கூர்களைக் கொண்டு
குத்திக் கிழிக்கிறது மழைக் கால்கள்
வானம் குளிரில் நடுங்குகிறது
அதன் பொத்தல்களை மூடிவிட
முகில்கள் அலைகின்றன
நீரின்றி அமையாத உலகில் மூழ்கி மூச்சித்திணறுகிறது
எங்கள் இயலாமை
காகிதக்கப்பல் விட மனமற்ற சிறுவர்கள்
தாய்ச்சூட்டில் சுருள்கிறார்கள்
நீ தண்ணீர் தேசத்தை பாத்திருக்கிறாயா ?
மூக்கு முட்ட மூச்சித்திணறியபடி நான் இப்போது பார்க்கிறேன்
மண்ணும் சபித்து மரத்தால் விழுந்த எம்மினத்தை
வானும் சபிக்க மழையேறி மிதிக்கிறது
வீட்டின் பொருட்களையும்
முடிவுற்ற எங்கள் கனவுகளையும் முதுகில் ஏற்றி
ஊரூராய் அலைகிறது வெள்ளம்
உயர்த்தப்பட்ட விளம்பர பலகைகளும்
மின்சார கம்பிகளும் நகரின் இருப்பை காத்துகொண்டிருக்கிறது
பாலின்றி குளிரில் விறைத்த முலைகளை சப்பி
விறைக்கின்றனர் குழந்தைகள்
பெருவெள்ளத்தில் திடுக்கிட்டழுகிறார்கள் பிஞ்சுகள்
காலாவதியான முதியோரின் உடல்சூடு
வெள்ளக்குளிரில் நம்பிக்கையற்ற
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது
தொடர்பற்று துண்டிக்கப்பட்ட நீர் வெளிகளில்
நாளைக்காய்ப் பிராத்திக்கிறார்கள் மக்கள்
எந்த சலனமும் அற்று தூறுகிறது வானம்
குளங்களை உடைக்கிறது நீரின் போர்க்குணம்
பல மடங்கு விலை உயர்வில் கிடைக்காத உணவு பொருட்களை
எண்ணி விம்முகிறது ஏழைகளின் மனது
உயிர் காக்கும் நீர் ஊன் அழித்துப் பாய்கிறது
ஈரத்தரைகளில் மூட்ட மூட்ட அணைகிறது நெருப்பு
முதுகில் பொருட்களை ஏற்றும் பெருவெள்ளம்
பிணங்களையும் சுமக்கிறது
இருப்பதை அவிக்க ஒரு வேளை மட்டும் நிறையும் வயிறு
எப்போதும் மழைக்காக வானம் பார்க்கும் கண்கள்
இப்போது தொலைந்த சூரியனை தேடுகின்றன
மிக இயல்பாய் காட்சியளிக்கிறது தண்ணீர் தேசம்
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல்
எப்போதும் போலவே
அதன் பாட்டில் பெய்கிறது மழை
0 comments:
கருத்துரையிடுக