பேய் இருட்டைப் பிழந்து நடுநிசியில்
கவிகிறது நிலவு
சலனங்களற்ற நிசப்தத்தின் கரைகளில்
சஞ்சரிக்கும் என் உயிர்
அமானுசியங்களின் சிதைவில்
தாயின் வற்றிய முலைகளை சப்பிய
குழந்தையின் முனகலில் சிதைகிறது
மூச்செறிந்துறங்கும் சொறிநாயின் சப்தங்கள்
சுவரில் படிந்து காற்றிறுகிய மரங்களில்
வழிந்தொழுகும் நிலவின் துளியை நக்கி அடர்கிறது
பல்லியின் நிழல்
விறைத்த ஆண்குறி சூடுதணியத் துலாவுகிறது
வன்மத்தில் மறியேறிய
கறுப்பு வெள்ளை மாட்டின் அலறலில்
அம்மா அரட்டப்பட்டாள்
கழுத்துச் சுருக்கங்களில் பிசிபிசுத்து வடியும்
வியர்வையின் நிமித்தம்
கலைந்த என் தூக்கத்தில் தொன்மங்கள்பற்றிய
தொடர்பறுந்த கனவு மீதியை அவாவுகிறது
பேய்கள் பற்றி அச்சுறுத்திய படி
அம்மா முதுமைக் கண்களால் அயர்கிறாள்
வறண்ட தொண்டை நனைத்து
தொன்மத்துள் புதையும் மனது
ஒட்டிய கனவின் மறுபாதியில்
ஓரு துப்பாக்கியின் குழல் சூட்டில்
கருகித் தீய்ந்து நாற்றமெடுக்கிறது
என்னினத்தின் கருமுட்டையும் விந்தும்
சூடுதணியத் துலாவிய ஆண்குறி சுருங்க
கறுப்பில் தோய்ந்த சப்பாத்தின் நிழலில்
மறைகிறது என் தொன்மம்
காலத்தின் புரியறுந்த நார்களில் தொங்கி
இறைஞ்சித் துடித்தது சுயம்
காறிச்செருமி பசியின் பொருட்டு
மழைக்காக வானம் பார்த்த
அப்பாவின் சத்தத்தில்
அம்மா மீண்டும் அரட்டப்பட்டாள்
1 comments:
முகப்புத்தகத்தில் உங்கள் ஆக்கம் பார்த்து, அதன் மூலமாக உங்கள் வலைப்பதிவு வந்தேன். உங்கள் எழுத்து வசீகரமாயும், வலிகளை உரத்துச் சொல்வனவாயும் இருக்கின்றன.வாழ்த்துக்கள்.
நட்புடன் சஞ்சயன்
visaran.blogspot.com
கருத்துரையிடுக