வானத்தின் விழுதுகள்
நிலத்தில் பெருக்கெடுக்கும் இரவுகளில்
இமைகள் துமிக்கும் சிறு நீரினூடே
பொரித்தூரும் கனவுக் குஞ்சுகள்
கன்னத்தில் கறுத்த மயிர்த் திரளில்
கோடாய் குழிகளில் நிறைகிறது
அக்கினிப் பிரவேசத்தில் இருந்து
சீதை இன்னும் மீண்டுவர வில்லை
சிலம்போடு போன கோவலன் தேடப் படுகிறான்
தாலி அறுக்கப் பட்ட பின்னும்
கண்ணகியின் முலைகளில் நெருப்பு
உருப்படாமல் இருக்கிறது
வீதிவிடங்கன் கொன்ற கன்றின் பசு
வாயில் மணியைத் தேடித் தொலைகிறது
ஒரு சுற்றில் அவிழ்க்கப்பட்ட அம்மணத்தோடு
பாஞ்சாலி மீட்கப்படாத பணயத்தில் இருக்கிறாள்
இராமனின் வனவாசத்தில்
நடுகல்லில் உறைந்த அகலிகை
உடைக்கப் பட்டாள்
அத்தினா புரம் திருடப் பட்ட பின்
பாண்டவர் இந்திரப்பிரசத்தை இன்னும் ஏற்கவில்லை
காண்டீபத்தில் கழுகமரும்படி
கண்ணனற்ற தேரில் அர்ச்சுணன் அம்பற்றிருக்கிறான்
மூன்றாம் குலோத்துங்கன்
துறவுக்குகச் சென்றபின்பு
போதிமர முனிவர் நிலங்களை அள்ளுகிறார்
அரிச்சந்திரன் இன்னும் உண்மை சொல்ல வில்லை
பாரி கொடுத்த தேரில் முட் கம்பிகள் படர்கின்றன
ஒரு இனத்தின் தசைகளில் நிரம்பியும்
இன்னும் உயராத சிபியின் தராசில்
கல்லறைகள் குவிகிறது
ஆறு நாள் பெய்த ஓயாத பெருமழையில்
புழுதி படிந்த என் அகதிக் கூடாரம் இன்னும்
சகதியாகவில்லை