காணவிரும்பாக் காட்சிகளூடு
களமற்ற வெளியொன்றில் ஆடை அவிழ்ந்து
அசிங்கப்படுத்தப் பட்ட
உனது புகைப்படத்தையும் காலம் என்னில்
காட்டிச்செல்கிறது
உனது பிணத்தைப் புணர்ந்தவனைப் பற்றிய
எனது தேசக்குறிப்பின் மீது
காட்டெருமைகள் தமது உருவத்தை
வரைந்து கொள்கின்றன
மானத்தின் பொருட்டு
நீ மூடி வைத்த மார்பகங்களில்
கோரப்பற்களின் துண்டுகளைக் காண்கின்றேன்
உன்னைச் சுற்றி உறைந்து போன குருதியில்
எனது இரத்த நெடில் வீசுகிறது
உனது குருதியில் சிவந்த நிலத்தை போல
நான் வெட்கத்தில் சிவக்கிறேன்
உனது பெண்ணுறுப்பை சிதைத்தவன்
ஒரு தாயின் பிறப்புறுப்பில் இருந்து
வந்தவனில்லை என்பது
எவ்வளவு பெரிய உண்மையோ
அதைவிட பெரிய உண்மை
உலகில் மனிதர்கள் இல்லை என்பதும்
ஆடையற்றிறந்தபடி கிடக்கும்
உனது புகப்படத்தைக் காட்டி
சுதந்தைரத்தை யாசிக்கிறது எனது குலம்
உன் அம்மணத்தில் மலரும்
எனது சுதந்திரக் கனவை எண்ணி
நீ உயிரோடிருந்திருப்பின் ஏளனித்திருப்பாய்
இல்லையெனில் காறி உமிழ்ந்திருப்பாய்
உயிருற்றும் உயிரற்றும்
உனது பணி இனிதே நிறைவேறுகிறது
மயிர் நீர்ப்பின் வாழாத மண்ணில்
மல்லாக்க கிடக்கும் உனது தேகத்தை
கூவிக் கூவி விற்கும்
எனது சுதந்திர வீர்ரகளைப் பற்றி
உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை
எனது சார்பில் உன்னைக் கேட்கிறேன்
உனது மானத்தை விட பெரிதா
தாய்நாடும் வக்கிழந்த
எனது மண்ணாங்கட்டிச் சுதந்திரமும்