நீ என்னை கடந்த தெருக்களில்
எனது யுகங்களைக் கரைக்கிறேன்
சப்தங்களின்றி நீ சொரிந்து போன பாசைகளில்
ஒரு சமுத்திரம் விம்பிக்கிறது
எனது போர்குணச் சாயலில் நீ
பூக்களை கொய்து கொண்டிருக்கிறாய்
அருகில் விலகி தூரத்து புள்ளியொன்றில்
உன்னை அன்மிக்கிறேன்
வடு நிறைந்த நெஞ்சில் உனது
துளிர்த்தலின் சாத்தியத்தை வியக்கிறேன்
நமக்கு வழங்கப்பட்ட அவகாசங்கள்
தீர்ந்தபடியே இருக்கிறது
வெறும் மெளனங்களில் ஒட்டிவிட்ட நீ
எனது வார்த்தைகளை பிடுங்குகிறாய்
நாளை பற்றிய ஏக்கங்கள் நிறைந்த
நமது வாழ்வின் நிர்ப்பந்தத்தில் இருவருக்கிடையேயும்
இன்னும் நீழ்கிறது சீனத்து பெருஞ்சுவர்
ஓய்ந்துவிட்ட மழைப் பொழுதில்
பீலியில் தங்கி நின்று நிலத்தில் வீழும்
மழைத்துளியொன்றின் பரிதாபத்தோடு
ஒவ்வொரு கணமும் வீழ்கின்றன
என்னில் தேங்கிய நீ
உன்னில் மூழ்கிவிடாதிருக்கும் பிராத்தனையில்
நீ என்ற குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது
எனது வெற்றுப் படகு
0 comments:
கருத்துரையிடுக