மூழ்காத சமுத்திரத்தில் மூழ்கி
தினம் எழுந்து
நாளாந்தம் என் வாசலிலே
வந்துதிக்கும் சூரிய தேவனே
இன்னும் ஆறாத நெடுந்துயரின் பாரத்தை
தோளாறத் தூக்கி வைக்க
எனக்கிங்கு மனிதரில்லை
எக்கணமும் மாறாது நீதான்
புலர்பொழுதில் வந்துந்தன் கதிர்க்கரத்தால்
மேனியெல்லாம் நனைக்கின்றாய் அதனால்
உன்னை நம்பத்துணிகின்றேன்
விடி பொழுதில் பனிப்புகையை குடித்து விட்டு
வந்தமரு
இரு தேனீர்க்கோப்பைச் சந்திப்பில்
என்னைத் திறக்கின்றேன்
ஊர் அலைந்து திரிபவன் நீ
ஊரிழந்து அலைபவன் நான்
உனக்கு யாதும் ஊரே
எனக்கு ஏதும் ஊரில்லை
சரித்திரங்கள் கண்டவன் நீ
சரித்திரம் சாய தரித்திரம் பிடித்தவன் நான்
இத்தியாதி வித்தியாசங்களுள்ளும்
உன்னை நம்பத்துணிகின்றேன்
முதல் தேனீர் கோப்பையில்
நம் முரண்பாடுகளைக் களைவோம்
என் பெரு நிலத்தை நீ அறிவாய்
நான் விட்டுவந்த என் முற்றமும் உனக்கு
புதிதல்ல
அன்று நானும் அங்கிருந்தேன்
நீயும் இருந்தாய்
இன்று நானில்லை நீயிருக்கிறாய்
எனது மண்ணை அறியும் ஆவலில்
தேங்கி வழிகிறது மனம்
நாளாந்தம் நீ கண்டுவந்த செய்திகளை
சொல்லிவிடு எந்தனுக்கு
வில்லுக்குளத்தில் தாமைரைகள் பூத்ததா
வாசல் ஒட்டுமாவில் அணில்கள் தாவினவா
முற்றத்து மல்லிகை பூத்துச் சொரிந்ததா
தென்னைகளில் தேங்காய்
குலை குலையாய் விழுகிறதா
தங்கை நட்ட பூ மரங்கள்
கருகிவிட்டனவா
வாசலில் அறுகு படர்ந்து அடர்கிறதா
முச்சந்திப் புளியடியில் பேய்கள் உறைகிறதா
விட்டுவந்த வெள்ளைப் பசு
கன்றேதும் ஈன்றதுவா
என் பிரிவை தாங்காத பெரு நிலத்தாய்தான்
அழுது தொலைத்தாளா
ஏதுமறியாதோர் இருள் வெளியில் இருக்கின்றேன்
மேய்ப்பானுமில்லை மேச்சல் நிலமில்லை
மாயக்கதைகளுக்குள் புதைகின்றேன்
மானிடர்கள் திரித்துவிடும் புரளிகளின்
உண்மைகளை நீயறிவாய்
என் மேய்ச்சல் நிலப்பக்கம் சென்றாயா
மேய்ப்பானை எங்கேனும் கண்டாயா
நாளை குறு நடையில் என் பொன்னிலத்தை
கடக்க நேர்ந்தால் அதனிடத்தில்
ஊர் நினைவில் உக்கி ஊனழிந்து
உயிரணுக்கள் உருக்குலைந்து இற்றுவிட்ட மனதுடனே
உடல் தழுவ காத்திருக்கும்
என் நிலையை சொல்லிவிடு
மேய்ப்பானைக் கண்டால் சாப்பொழுதில் ஒருதடவை
முகம் காட்ட பரிந்துரை செய்
பரிதிக் கடவுளே
உன்னை நம்பத்துணிகின்றேன்
0 comments:
கருத்துரையிடுக