அகமும் முகமும் புதைந்த
உருவற்ற வெளியின் சிதைவுகளில்
எனக்கான விடுதலையையும்
எனக்கான சுதந்திரத்தையும்
பாடல்களில் இசைக்கிறேன்
பேய்கள் சிதைத்த நிலத்திலிருந்தும்
கொலையுண்ட கல்லறைகளிலிருந்தும்
எனது பிரகடனத்தின் சொற்கள் எழுகின்றன
துரத்தப்பட்ட ஊரின் குழந்தைகள்
அந்தச்சொற்களை உச்சரிக்கிறார்கள்
கசிகின்ற முதுகண்களில்
அந்த சொற்கள் உறைகின்றன
எரிந்த நிலமெங்கிலும் அலைவுறும் ஆன்மாக்கள்
இன்னுமின்னுமாய் அதே சொற்களை ஆர்ப்பரிக்கின்றன
நிலமெங்கிலும் பேய்கள் பெருநடம் புரிகையில்
பசியில் அலையும் கொடுமிருகம்
மண்ணை தின்னத்தின்ன
மரத்தில் இருந்தும் மலைமுகட்டில் இருந்தும்
எனது சொற்கள் உதிர்கின்றன
மூடப்பட்ட பதுங்கு குழிகளுள்
மூடாது விரிந்த விழிகளின் பார்வை
உறையும் புள்ளிகளெங்கிலும்
விடுதலையின் சொற்கள் அழுகின்ற சத்தத்தில்
குழந்தைகள் அரண்டெழுகிறார்கள்
விடுதலை பிரபஞ்சத்தை உடைக்கிறது
விடுதலை கண்ணீரிலும் உதிரத்திலும்
உயிர்க்கிறது
விடுதலை ஒரு இனத்தின் கனவு
விடுதலை உடைத்துயரும் வீரத்தின் விலை
விடுதலை ஆனந்தத்தின் உச்சம்
விடுதலை ஆன்மாவின் யாத்திரை
விடுதலை ஒரு அறைகூவல்
விடுதலை எப்போதும் அடுக்கப்பட்ட
முன்னோர்களின் சிதைகளிலிருந்தே
எழுவதாயிருக்கிறது
0 comments:
கருத்துரையிடுக