இருத்தல் என் சுதந்திரம்

வெள்ளி, 4 நவம்பர், 2011

குழி பூக்கும் காலம்

வெள்ளி, 4 நவம்பர், 2011

கொட்டும் மழையில்

கொல்லப்பட்ட நிலமெங்கிலும்

உயிர்க்குழிகள் பூக்கத் தொடங்கையில்

ஆர்ப்பரிப்பற்ற அகழ் வெளியில்

புதைந்த கனவுகளின் வியர்வை

மண்ணில் கசிகிறது

மானம் நிறைந்து குழியில் முளைத்த

காவல் சிலைகள்

நொருங்கிச் சிதறிய துண்டங்கள்

மண்ணில் வீழ்ந்து துடித்த தருணத்தில்

பார்க்க வராத அம்மாவைப் பற்றியும்

பழகி மறந்த உறவைப் பற்றியும்

புலம்பும் வாயின் சொற்கள் உறைந்த

ஆழ் நிலத்தில்

உனதும் எனதும் முகங்களைச் சுமந்து

அவர்கள் அலைகிறார்கள்

உன்னையும் என்னையும் பற்றியே

அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்

சமுத்திரம் உதைக்கும் அலைகள் அள்ளி வரும்

அவர்களின் குளிர்ந்த சொற்கள் நம்மைப்பற்றியதே

புள்ளி தொடாத கோடுகளோடு

நிலத்தின் அடியில் உலவும் அவர்களிடம்

எனதும் உனதும் மீதிக்கதைகளை

யாருரைப்பர்

அடக்கம் செய்யப்படாடாத நமது கல்லறைகளை

எவ்வாறறிவர்

நம் நிச்சயமற்ற வெளிகளை யார் காட்டுவர்

நாறும் நம் சொற்களை அவர்கள் கேட்காதிருக்கட்டும்

நிலத்தின் காயங்கள் மனமெங்கும் குழியாய் எழ

சீழ் படிந்த நம் காயங்களில் கழுகுகள் பசியாறுமுன்

பூக்களற்ற கைகளோடு பறிக்கப்பட்ட

இடர் நிலத்தைக் கடந்து சென்று

வா குழிப்பூக்களைப் பறித்து

தலையில் சூடிக்கொள்வோம்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket