கொட்டும் மழையில்
கொல்லப்பட்ட நிலமெங்கிலும்
உயிர்க்குழிகள் பூக்கத் தொடங்கையில்
ஆர்ப்பரிப்பற்ற அகழ் வெளியில்
புதைந்த கனவுகளின் வியர்வை
மண்ணில் கசிகிறது
மானம் நிறைந்து குழியில் முளைத்த
காவல் சிலைகள்
நொருங்கிச் சிதறிய துண்டங்கள்
மண்ணில் வீழ்ந்து துடித்த தருணத்தில்
பார்க்க வராத அம்மாவைப் பற்றியும்
பழகி மறந்த உறவைப் பற்றியும்
புலம்பும் வாயின் சொற்கள் உறைந்த
ஆழ் நிலத்தில்
உனதும் எனதும் முகங்களைச் சுமந்து
அவர்கள் அலைகிறார்கள்
உன்னையும் என்னையும் பற்றியே
அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்
சமுத்திரம் உதைக்கும் அலைகள் அள்ளி வரும்
அவர்களின் குளிர்ந்த சொற்கள் நம்மைப்பற்றியதே
புள்ளி தொடாத கோடுகளோடு
நிலத்தின் அடியில் உலவும் அவர்களிடம்
எனதும் உனதும் மீதிக்கதைகளை
யாருரைப்பர்
அடக்கம் செய்யப்படாடாத நமது கல்லறைகளை
எவ்வாறறிவர்
நம் நிச்சயமற்ற வெளிகளை யார் காட்டுவர்
நாறும் நம் சொற்களை அவர்கள் கேட்காதிருக்கட்டும்
நிலத்தின் காயங்கள் மனமெங்கும் குழியாய் எழ
சீழ் படிந்த நம் காயங்களில் கழுகுகள் பசியாறுமுன்
பூக்களற்ற கைகளோடு பறிக்கப்பட்ட
இடர் நிலத்தைக் கடந்து சென்று
வா குழிப்பூக்களைப் பறித்து
தலையில் சூடிக்கொள்வோம்
0 comments:
கருத்துரையிடுக