இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பொய்யெனப் பெய்யும் மழை

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

வானத்தின் விழுதுகள்

நிலத்தில் பெருக்கெடுக்கும் இரவுகளில்

இமைகள் துமிக்கும் சிறு நீரினூடே

பொரித்தூரும் கனவுக் குஞ்சுகள்

கன்னத்தில் கறுத்த மயிர்த் திரளில்

கோடாய் குழிகளில் நிறைகிறது

அக்கினிப் பிரவேசத்தில் இருந்து

சீதை இன்னும் மீண்டுவர வில்லை

சிலம்போடு போன கோவலன் தேடப் படுகிறான்

தாலி அறுக்கப் பட்ட பின்னும்

கண்ணகியின் முலைகளில் நெருப்பு

உருப்படாமல் இருக்கிறது

வீதிவிடங்கன் கொன்ற கன்றின் பசு

வாயில் மணியைத் தேடித் தொலைகிறது

ஒரு சுற்றில் அவிழ்க்கப்பட்ட அம்மணத்தோடு

பாஞ்சாலி மீட்கப்படாத பணயத்தில் இருக்கிறாள்

இராமனின் வனவாசத்தில்

நடுகல்லில் உறைந்த அகலிகை

உடைக்கப் பட்டாள்

அத்தினா புரம் திருடப் பட்ட பின்

பாண்டவர் இந்திரப்பிரசத்தை இன்னும் ஏற்கவில்லை

காண்டீபத்தில் கழுகமரும்படி

கண்ணனற்ற தேரில் அர்ச்சுணன் அம்பற்றிருக்கிறான்

மூன்றாம் குலோத்துங்கன்

துறவுக்குகச் சென்றபின்பு

போதிமர முனிவர் நிலங்களை அள்ளுகிறார்

அரிச்சந்திரன் இன்னும் உண்மை சொல்ல வில்லை

பாரி கொடுத்த தேரில் முட் கம்பிகள் படர்கின்றன

ஒரு இனத்தின் தசைகளில் நிரம்பியும்

இன்னும் உயராத சிபியின் தராசில்

கல்லறைகள் குவிகிறது

ஆறு நாள் பெய்த ஓயாத பெருமழையில்

புழுதி படிந்த என் அகதிக் கூடாரம் இன்னும்

சகதியாகவில்லை

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket