இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 24 அக்டோபர், 2011

இல்லாத போது இருக்கின்ற தேச வெளி

திங்கள், 24 அக்டோபர், 2011

நிலாவில் பாட்டி ஒருத்தி

வடை சுட்டுக்கொண்டிருந்த போது

அம்மா எனக்கான பாடலை

இசைத்துக்கொண்டிருந்தாள்

நிறங்களில் நிரம்பிய வெளியெங்கிலும்

நான் மிதந்தேன்

குளங்களில் எனது தூண்டில்கள்

அந்தப் பாடலை இசைத்தன

வாலறுந்து வீழ்ந்த எனது பட்டம்

அதே பாடலையே இசைத்தது

ஆலையிலே சோலையிலே

ஆலம் பாடிச் சந்தையிலே

கிட்டியும் புள்ளும் கிறுகியடிக்க

பாலாறு…. பாலாறு……

என்று தோழர்கள் வாய் விரிய கூவிய பாடலில்

நிலம் அசைந்தது

நான் தோழர்களின் பாடலிலிருந்தேன்

வடை சுட்ட பாட்டி சுடப்பட்ட போது

பாட்டி இறந்து கிடந்தாள்

காகமும் நரியும்

அவளின் பாடலை இசைத்தன

நான் காகத்தின் பாடலிலிருந்தேன்

வீதியில் மரணம் நிரம்பி மலிந்த நாட்களில்

பலர் பாடினர்

பாரதியின் சிட்டுக் குருவியின்

பாடலைப் போல

விடு…. விடு…. என்று அவர்கள் பாடினர்

வெடிச்சத்தங்களையும் மரணங்களையும் கிழித்து

காற்றில் உலவிய அந்தப் பாடல்களை

நான் கேட்ட போது

அம்மா பாடாதிருந்தாள்

ஆலையும் சோலையும் தோழர்களற்றிருந்தது

நான் தூண்டிலின் பாடகனாகவும்

தோழர்களின் பாடகனாகவும் இல்லாதிருந்தேன்

இரவுகள் ஆட்காட்டிப் பறைவையின் பாடலின்

நிறையும் தருணங்களில்

நான் காதலின் பாடகன்

நிலமும் வானும் நிறமற்ற பொழுதில்

இசையற்ற என் சொற்கள் வாழ்வின் ஆசையை

பிரகடனப் படுத்தின

நான் இனத்தின் பாடகனாய் இருந்த போது

காதலின் பாடகனாய் இல்லாதிருந்தேன்

நிலத்தின் பாடகனாய் இருந்த போது

நிலம் என்னிடம் இல்லாதிருந்தது

தேசத்தின் பாடகனாய் இருந்த போது

நான் இல்லாதிருந்தேன்

இருக்கின்ற போது இல்லாத என்னை

இல்லாத போது இருக்கிற என்னை

நாள் முழுக்க அலுக்காத ஓர் காகம்

அதன் கரிய சொண்டுகளில் தினமும்

எனக்கான அதன் பாடலை பாடிச் செல்கிறது

என்னைப் போல் புரியாத அதன் மொழியில்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket