உயிருகி நீராய் உருப்பட்டு
ஓர் நாளில் என் நதிகள் இறங்கும்
எரிமலையின் சீற்றமாய் இருக்கும்
முகடொன்றில் அது புறப்படலாம்
விறு விறுவென வீரியத்துடன்
கூர்ப்பாறைகள் சிதைய
மஞ்சள் நீலம் பச்சை சிவப்பாய்
என் நதிகள் இறங்கும்
நானும் இறங்குவேன்
இருண்ட சிலுவையிலிருந்தும்
இடித்த சிறைகளிலிருந்தும்
நான் இறங்கும் போது
நீயும் இறங்கிக்கொள்
மண் அணைகளையும் முட்கம்பிகளையும்
நான் உடைக்கும் போது
நீயும் உடைத்துக் கொள்
இறங்கும் நம் நதியில்
அழுகிப்போன எமது மானத்தை
கழுவுவிக் கொள்வோம்
உந்தி வீழும் நதியில்
நிலம் பிளக்கும் குருத்து மணல் பாயும்
நிலப் பிளவுகளிலிருந்து
நம் தொன்மத்தையும்
மூதாதயரின் சொற்களையும் கல்லறைகளையும்
நான் பொறுக்குவேன்
நீயும் பொறுக்கிக் கொள்
நிலத்தில் அடியில் உறைந்து போன
ஓர் தேசிய கீதம் துடித்துக்கொண்டிருக்கும்
அதையும் அள்ளியெடு
விறு விறுவென நதியிறங்கும் காலத்தில்
சிலுவையிலிருந்தும் சிறைகளிலிருந்தும்
நான் இறங்குவேன்
மறக்காது நீயும் இறங்கிக்கொள்
0 comments:
கருத்துரையிடுக