இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிகளிறங்கும் காலம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உயிருகி நீராய் உருப்பட்டு

ஓர் நாளில் என் நதிகள் இறங்கும்

எரிமலையின் சீற்றமாய் இருக்கும்

முகடொன்றில் அது புறப்படலாம்

விறு விறுவென வீரியத்துடன்

கூர்ப்பாறைகள் சிதைய

மஞ்சள் நீலம் பச்சை சிவப்பாய்

என் நதிகள் இறங்கும்

நானும் இறங்குவேன்

இருண்ட சிலுவையிலிருந்தும்

இடித்த சிறைகளிலிருந்தும்

நான் இறங்கும் போது

நீயும் இறங்கிக்கொள்

மண் அணைகளையும் முட்கம்பிகளையும்

நான் உடைக்கும் போது

நீயும் உடைத்துக் கொள்

இறங்கும் நம் நதியில்

அழுகிப்போன எமது மானத்தை

கழுவுவிக் கொள்வோம்

உந்தி வீழும் நதியில்

நிலம் பிளக்கும் குருத்து மணல் பாயும்

நிலப் பிளவுகளிலிருந்து

நம் தொன்மத்தையும்

மூதாதயரின் சொற்களையும் கல்லறைகளையும்

நான் பொறுக்குவேன்

நீயும் பொறுக்கிக் கொள்

நிலத்தில் அடியில் உறைந்து போன

ஓர் தேசிய கீதம் துடித்துக்கொண்டிருக்கும்

அதையும் அள்ளியெடு

விறு விறுவென நதியிறங்கும் காலத்தில்

சிலுவையிலிருந்தும் சிறைகளிலிருந்தும்

நான் இறங்குவேன்

மறக்காது நீயும் இறங்கிக்கொள்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket