இருள் கசியும் போர்வையின் சந்துகளில் சயனிக்கும்
மூச்சின் வெற்றிடமற்ற வெளியெங்கிலும்
நரைத்துப்போன கனவுகள் முளைத்து முகைக்கின்றன
அழுதூற்றியயர்ந்த கண்களில்
அரைத்தூக்கம் கவியும் தருணத்தை அணைத்து
புலம்பும் குரல்களில் நிலம் அசைகிறது
மண்ணைச் சுமந்த அவர்களின் நெஞ்சில்
திண்மித்த கனவுகள் எரியும் வெளிச்சத்தில்
தெற்கில் ஒருவன் பிரகாசிக்கிறான்
கூட்டில் தவறிய குஞ்சொன்று தன் சொண்டில்
நிலத்தை கிளறுகிறது
உதிரும் அதன் பிஞ்சிறகில் வாழ்வின் ஆசையை
அள்ளுகிறேன்
மழை சுடும் இவ்விரவில்
பூஞ்செடி நட தாயிடம் முற்றம் கேட்ட சாரு
உறங்கியிருப்பாள்
தாயிடம் முற்றமில்லை முகமுமில்லை
சாரு அதை எங்கு நட்டிருப்பாள் ?
நட்டுவைக்க முற்றமின்றி அவள் அணைத்துறங்கும்
செடியின் வேர் என்னைப் படர்கிறது
பிடி மண் மீதான அவளின் கோரிக்கையின் அழுகுரல்
என் வெட்கத்தைக் குடைகிறது
பறிக்கப்படாத சொற்கள் உசுப்பிவிட்டுப் போகும்
தொகை வலியில்
நான் நானற்றிருக்கிறேன்
நிலம் என்னுள் கனவுகளை உதிர்க்கிறது
நிலம் என்னை கோபத்தோடு அலைவிக்கிறது
நிலமே என்னை அழுகிறது
நிலமே என்னை நிரப்புகிறது
நிலத்தில் மட்டுமே என் சொற்கள் முளைக்கின்றன
நிலத்தில் மட்டுமே நான் குவிகிறேன்
நிலம் என்னுள் வாழ்கிறது
நிலம் என்னைக் கொல்கிறது
நிலம் அரட்டும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறேன்
நிலவும் நட்சத்திரங்களும் எரியும் இரவில்
மூர்க்கத்தைச் சுமந்து முறுவலித்த என் பார்வையில்
பிரபஞ்சம் எரிவதாயில்லை
0 comments:
கருத்துரையிடுக