இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 3 அக்டோபர், 2011

நிலத்தில் முளைக்கும் சொற்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011

இருள் கசியும் போர்வையின் சந்துகளில் சயனிக்கும்

மூச்சின் வெற்றிடமற்ற வெளியெங்கிலும்

நரைத்துப்போன கனவுகள் முளைத்து முகைக்கின்றன

அழுதூற்றியயர்ந்த கண்களில்

அரைத்தூக்கம் கவியும் தருணத்தை அணைத்து

புலம்பும் குரல்களில் நிலம் அசைகிறது

மண்ணைச் சுமந்த அவர்களின் நெஞ்சில்

திண்மித்த கனவுகள் எரியும் வெளிச்சத்தில்

தெற்கில் ஒருவன் பிரகாசிக்கிறான்

கூட்டில் தவறிய குஞ்சொன்று தன் சொண்டில்

நிலத்தை கிளறுகிறது

உதிரும் அதன் பிஞ்சிறகில் வாழ்வின் ஆசையை

அள்ளுகிறேன்

மழை சுடும் இவ்விரவில்

பூஞ்செடி நட தாயிடம் முற்றம் கேட்ட சாரு

உறங்கியிருப்பாள்

தாயிடம் முற்றமில்லை முகமுமில்லை

சாரு அதை எங்கு நட்டிருப்பாள் ?

நட்டுவைக்க முற்றமின்றி அவள் அணைத்துறங்கும்

செடியின் வேர் என்னைப் படர்கிறது

பிடி மண் மீதான அவளின் கோரிக்கையின் அழுகுரல்

என் வெட்கத்தைக் குடைகிறது

பறிக்கப்படாத சொற்கள் உசுப்பிவிட்டுப் போகும்

தொகை வலியில்

நான் நானற்றிருக்கிறேன்

நிலம் என்னுள் கனவுகளை உதிர்க்கிறது

நிலம் என்னை கோபத்தோடு அலைவிக்கிறது

நிலமே என்னை அழுகிறது

நிலமே என்னை நிரப்புகிறது

நிலத்தில் மட்டுமே என் சொற்கள் முளைக்கின்றன

நிலத்தில் மட்டுமே நான் குவிகிறேன்

நிலம் என்னுள் வாழ்கிறது

நிலம் என்னைக் கொல்கிறது

நிலம் அரட்டும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறேன்

நிலவும் நட்சத்திரங்களும் எரியும் இரவில்

மூர்க்கத்தைச் சுமந்து முறுவலித்த என் பார்வையில்

பிரபஞ்சம் எரிவதாயில்லை

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket