இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உன் தாத்தாவிடம் ஒரு தாய்நிலம் இருந்தது

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பறவைகள் அமரும் கிளைகளில்

உறைகின்ற என் விழிகள்

நிலத்தில் முளைக்கின்றன.

ஒரு பைத்தியக்காரனைப் போல

உன்னிடம் என்னைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கரங்களை உயர்த்தி நிலம் கதறியழுத பொழுதில்

உயிர் மூட்டையைச் சுமந்துகொண்டு

தலைகால் புரியாது உன் நிலத்தைப் பிரிந்து

நீ என்றேனும் ஓடியிருக்கிறாயா?

நான் ஓடியிருக்கிறேன்.

நட்ட மாமரம் குலையாய் காய்க்கும் முன்

தங்கை அடுப்பில் வைத்த மண்சோற்றை இறக்க முன்

வாழ்வின் ஆசையை கைகளில் அள்ளிக்கொண்டு

நான் ஓடியிருக்கிறேன்.

ஒரு தமிழனாக நானிருந்த காலத்தில் அது நிகழ்ந்திருப்பின்

நீ அப்போது கர்ப்பத்தில் இருந்திருப்பாய்.

முன்பொருகாலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது.

எனது சிறுவர்கள் முற்றத்தை தோண்டினர்.

அன்று எங்களிடம் முற்றமுமிருந்தது.

வாரியள்ளிய நிலத்தை போர்வையென

நான் பூசிக்கொண்ட நாளில்

நிலம் என்னைப் புன்னகைத்தது.

என் கனவுகள் இன்றெனது மண்ணில்

மேடாகிக் குவிந்திருக்கும்

சாலை விழிகள் என் வருகை தோற்று

பூத்திருக்கும்

முட்கம்பிகளால் எனது நிலத்தைக் கொள்ளையடித்தவர்களிடம்

புனித நிலம் அழுகுரலை உயர்த்தி

என் பிரியத்தைப் பகிர்ந்திருக்கும்.

இப்படி நீ என்றேனும் உனது நிலத்தை நேசித்திருக்கிறாயா?

என்னைப் போல் நீயும் நேசித்தாக வேண்டுகிறேன்

ஒரு மரத்தைப் போல

கால்களை மண்ணில் புதைத்துக் கொண்டு

உரக்கக் கூவி சூரியனைப் பார்த்தபடி

யுகம் ஒன்று தீரும் வரை வாழ்ந்து

தாய் நிலத்தில் கரையத்துடித்த என் விருப்பை

மறவாது உன் காலத்திடம் பகிர்வாயா?

எனது சார்பில் உனக்கிது உரைக்கின்றேன்

உனக்கென்றொரு நிலம், மண்தோண்ட ஒரு முற்றம்

உனது காற்று, நீ உரத்துப்பேச ஒரு வெளி

இன்ன பிறவும் நீ கொள்ள விரும்பின்

உனது தாத்தாக்களைப் போல

வீரம் தெறித்து முறுகித்திமிர்த்த தமிழனாய் இருக்கும்

சாத்தியங்களைச் சிந்தனை செய்…

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket