இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பூதங்கள் அலைவுறும் நிலம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

நிம்மதியின் நிழலும் கவியாத எனது வாழ்வெங்கும்

சித்தாத்தன் தன் கோடுகளை வரைகிறான்

நிறங்களை அவனே தூவுகிறான்

தூக்கம் விழிப்பு எங்கிலும்

அவனின் சொற்களே நிறைகின்றன

அவனே நிலமாக இருந்தான்

நீரும் காற்றும் அவனே

அவனின்றி என்னில் அணுவும் அசைந்த நினைவில்லை

சிறுவயதில் சோறூட்டும் போது

அம்மா அவனை அறிமுகப்படுத்தினாள்

ஒரு துப்பாக்கி காக்கி உடை தவம் கலைந்த முகம்

இப்படியே அவனைப்பார்த்தேன்

என் குறும்புத்தனங்கள் அதிகரிக்கும் போது

அவனிடம் என்னை கொடுக்கப்போவதாக அம்மா மிரட்டுவாள்

பள்ளி வகுப்பொன்றில் போதிமரத்தின் கீழ்

நிர்வாணமடைந்ததால்

சித்தாத்தன் கடவுள் என்று படித்தேன்

இருப்பினும் சித்தாத்தனும் சீடர்களும்

எங்கள் ஊருக்குள் வரும்போதெல்லாம்

அப்பா காட்டில் ஒழிந்து கொள்வார்

நினைவு வந்த நாளில் எனக்குள் அவன்

அசூரனாய் வெளிப்பட்டான்

வீடுகளை எரித்தான்

சீடர்களை அனுப்பி சூறையாடினான்

அரசமரக்கிளைகளில் காமம் சொரியும் போதெல்லாம்

எங்கள் பெண்கள் நிர்வாணமாகினர்

எல்லாம் அவன் மயமென்றான பின் கொலைகளும்

அவன் பொருட்டே நிகழ்ந்தது

நாட்டைத் துறந்தவனே எனது நிலத்தை பறித்தான்

அவனது திருவோடு எனது கைகளில் விழுந்தது

எல்லா யுகங்களிலும் அவனுக்கு வேறு வேறு முகங்கள்

அவன் அவதாரமெடுத்த எந்த முகத்திலும்

எனது இனத்தின் மீதான இரக்கக் கோடுகளை

நான் கண்டதில்லை

நேற்றும் சித்தாத்தனை சிலர் கண்டதாகக் கூறினர்

உடல் முழுவதும் கறுப்பாகி நகங்கள் நீண்டு

பூதத்தைப் போல அவன் இருந்ததாகப் பயந்தனர்

பூதங்கள் அலைவும் நிலத்தில்

போதிமரங்கள் இல்லை

வேலி பயிரை மேயும் காலத்தில்

சித்தாத்தனின் முகங்களை நானறிவேன்

நீயறிவாயா?

1 comments:

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையான கவிதை.

கருத்துரையிடுக

 
◄Design by Pocket