என் உயிர்க்கொடியில் இருந்து
எழுகின்ற ஓசைகளில்
சொற்களைக் கொறித்தபடி
ஒரு பாடகன் எனக்குள் என்னை இசைக்கிறான்
நேற்றும் இன்றும் நாளையுமென
அள்ளிச்சொரியும் பாடல்களில்
இசைக்குறியென
நெளிந்தும் வளைந்தும் காற்றில் அலைகிறது
என் உயிர்ப்பிரவாகம்
சொற்களில் நிரம்பி வழிகின்ற தருணங்களில்
யுகங்களை சுமந்தபடி பிறக்கிறேன்
வாழ்வுச்சுவர்களில் மோதியும் தொங்கியும்
நிலத்தில் வீழும் என் சொற்களில்
பறவைகள் உயித்தெழுகின்றன
வெந்து தீய்ந்து மணக்கும் என் நம்பிக்கையின் சொச்சங்களை
குளிர் தேசங்களுக்கு காவிச்செல்கின்றன பறவைகள்
என்னினத்தின் மீதும் மொழியின் மீதும்
என்னைப் பூசிச்செல்கின்ற காற்று
ஓர் கணத்தில் என்னை விடுதலை செய்யும்
என் வார்த்தைகளை அள்ளியெடுத்து
தாய் ஒருத்தி என்னை கர்ப்பத்தில் சுமக்கக் கூடும்
நிலமும் சுதந்திரமும் நீண்ட பெருவாழ்வும்
அற்றவனென்றெனது நெடுந்துயரை
காலம் காற்றெல்லாம் தூவியெறியும்
மோதி விழுந்தரற்றும் என் வார்த்தைகளில்
மீண்டெழுந்த பறவைகள்
கூடு திரும்பும் காலமொன்றில்
நரைக்கண்கள் மூடாது விழிந்திருந்து
பொன்னிலத்தின் பிடி மண்ணை நான் அள்ளி முகர
பெருநிலம் என்னை இசைத்தெழும்
நிலமும் நீரும் காற்றுமென
வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்
எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்
1 comments:
வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்
எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்
நல்ல கவிதை.
கருத்துரையிடுக