இருத்தல் என் சுதந்திரம்

சனி, 13 ஆகஸ்ட், 2011

உயிர்த்தசையும் காலம்

சனி, 13 ஆகஸ்ட், 2011

என் உயிர்க்கொடியில் இருந்து

எழுகின்ற ஓசைகளில்

சொற்களைக் கொறித்தபடி

ஒரு பாடகன் எனக்குள் என்னை இசைக்கிறான்

நேற்றும் இன்றும் நாளையுமென

அள்ளிச்சொரியும் பாடல்களில்

இசைக்குறியென

நெளிந்தும் வளைந்தும் காற்றில் அலைகிறது

என் உயிர்ப்பிரவாகம்

சொற்களில் நிரம்பி வழிகின்ற தருணங்களில்

யுகங்களை சுமந்தபடி பிறக்கிறேன்

வாழ்வுச்சுவர்களில் மோதியும் தொங்கியும்

நிலத்தில் வீழும் என் சொற்களில்

பறவைகள் உயித்தெழுகின்றன

வெந்து தீய்ந்து மணக்கும் என் நம்பிக்கையின் சொச்சங்களை

குளிர் தேசங்களுக்கு காவிச்செல்கின்றன பறவைகள்

என்னினத்தின் மீதும் மொழியின் மீதும்

என்னைப் பூசிச்செல்கின்ற காற்று

ஓர் கணத்தில் என்னை விடுதலை செய்யும்

என் வார்த்தைகளை அள்ளியெடுத்து

தாய் ஒருத்தி என்னை கர்ப்பத்தில் சுமக்கக் கூடும்

நிலமும் சுதந்திரமும் நீண்ட பெருவாழ்வும்

அற்றவனென்றெனது நெடுந்துயரை

காலம் காற்றெல்லாம் தூவியெறியும்

மோதி விழுந்தரற்றும் என் வார்த்தைகளில்

மீண்டெழுந்த பறவைகள்

கூடு திரும்பும் காலமொன்றில்

நரைக்கண்கள் மூடாது விழிந்திருந்து

பொன்னிலத்தின் பிடி மண்ணை நான் அள்ளி முகர

பெருநிலம் என்னை இசைத்தெழும்

நிலமும் நீரும் காற்றுமென

வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்

எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்

1 comments:

Rathnavel Natarajan சொன்னது…

வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்

எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்

நல்ல கவிதை.

கருத்துரையிடுக

 
◄Design by Pocket