காற்றுந்தும் வீதிகளில்
கால் தடங்களை அள்ளி
முகத்தில் அப்பும் புழுதிக் கந்தைகளூடு
கல்லறைகளைத் தேடி அலைகிறேன்
தூபிகளற்ற நினைவுகளைச் சுமந்து
காணிநிலம் துடித்துக்கசியும் சகதியில்
என்னைப் புதைக்கிறேன்
நினைவேந்தித் திரியும் அந்தியில்
பறவைகள் கூடுதிரும்புகின்றன
பழங்சோறு சுடும் காலத்தில்
சித்தாத்தன் துறவில் இருந்து மீண்டிருக்கிறான்
போதியரசனின் திருவோடு
எனது இனத்தின் ஆன்மாக்களில்
நிரம்பி வழிகிறது
தர்மச்சக்கரத்தில் கழுகுகள் ஓய்வெடுக்கின்றன
போதிமரம் வெற்றிக்களிப்பில்
மின் விளக்கென ஒளிர்கிறது
எமக்கு நினைந்தழும் வரத்துக்காக
தவத்தில் யுகங்களைக் கரைத்தவனின்
புனித்தந்தங்கள் அசைகின்றன
முலைகளைச் சிதைத்து
குழந்தைகள் பசித்திறந்த நாளில்
பாற்சோறு பகிரும் கரங்களில்
இன்னும் மறையாதிருக்கிறது
துடித்தழும் பல்லாயிரம் உயிர்களின் முகங்கள்
சரித்திரம் முடிவுற்ற நாளொன்றில்
வராமல் போனவர்களின் வார்த்தைகளை
தேடியழும் விதியில் தீபங்கள் எரிகின்றன
கிடைக்காத எனது சுதந்திரத்தின் பொருட்டு
கொல்லப்பட்ட
என் உறவுகள் என்னை மன்னிப்பார்களாக
பரிதவித்திறந்த குழந்தைகள்
என்னை சபிக்காதிருப்பார்களாக
கொலைக்கென அவர்களைப் படைத்த
கடவுளின் பெயரால் கேட்கிறேன்
சொர்க்கத்திலாவது அவர்கள்
சுதந்திரத்தை அடையட்டும்
0 comments:
கருத்துரையிடுக