இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நினைவேந்தித் துடித்தழுதல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

காற்றுந்தும் வீதிகளில்

கால் தடங்களை அள்ளி

முகத்தில் அப்பும் புழுதிக் கந்தைகளூடு

கல்லறைகளைத் தேடி அலைகிறேன்

தூபிகளற்ற நினைவுகளைச் சுமந்து

காணிநிலம் துடித்துக்கசியும் சகதியில்

என்னைப் புதைக்கிறேன்

நினைவேந்தித் திரியும் அந்தியில்

பறவைகள் கூடுதிரும்புகின்றன

பழங்சோறு சுடும் காலத்தில்

சித்தாத்தன் துறவில் இருந்து மீண்டிருக்கிறான்

போதியரசனின் திருவோடு

எனது இனத்தின் ஆன்மாக்களில்

நிரம்பி வழிகிறது

தர்மச்சக்கரத்தில் கழுகுகள் ஓய்வெடுக்கின்றன

போதிமரம் வெற்றிக்களிப்பில்

மின் விளக்கென ஒளிர்கிறது

எமக்கு நினைந்தழும் வரத்துக்காக

தவத்தில் யுகங்களைக் கரைத்தவனின்

புனித்தந்தங்கள் அசைகின்றன

முலைகளைச் சிதைத்து

குழந்தைகள் பசித்திறந்த நாளில்

பாற்சோறு பகிரும் கரங்களில்

இன்னும் மறையாதிருக்கிறது

துடித்தழும் பல்லாயிரம் உயிர்களின் முகங்கள்

சரித்திரம் முடிவுற்ற நாளொன்றில்

வராமல் போனவர்களின் வார்த்தைகளை

தேடியழும் விதியில் தீபங்கள் எரிகின்றன

கிடைக்காத எனது சுதந்திரத்தின் பொருட்டு

கொல்லப்பட்ட

என் உறவுகள் என்னை மன்னிப்பார்களாக

பரிதவித்திறந்த குழந்தைகள்

என்னை சபிக்காதிருப்பார்களாக

கொலைக்கென அவர்களைப் படைத்த

கடவுளின் பெயரால் கேட்கிறேன்

சொர்க்கத்திலாவது அவர்கள்

சுதந்திரத்தை அடையட்டும்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket