இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

காதல் அலையும் வெறித்த தெருக்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நினைவுகளில் படுத்துறங்கும் விதியில்

நீ வந்து போகிறாய்

கணம் எனக்கழியும் நினைவில்

இன்னும் நீர்த்துவிடாத நீ

தொலைவுற்றுப் போனாய்

முன்பொரு காலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது

ஒரு வானம் ஒரு பூமி

இப்படி ஏதேதோ……

நான் நிலத்தில் இருந்த காலத்தில்

உனது காதலில் இருந்தேன்

பள்ளியுடையில் உன்னை தினம் கடந்தேன்

உனது தெருவே பிரியமானதாகவும்

உனது பெயரே என் மொழியாகவும் இருந்த காலம் அது

எனதும் உனதும் நிலத்தை ஓர் நாள்

அவர்கள் பறித்தனர்

நள்ளிரவில் குண்டுகளை அள்ளி எறிந்தனர்

சாமத்தில் எரிந்த நகரத்தில்

எனக்குப்பிரியமான உனது தெரு

வெறித்துக்கிடந்தது

சம்பூர் சாம்பலூரானது

ஓலங்களுக்குள் உனது குரலை

தேடியலைந்தேன்

முகம் தெரியாத இருள் வெளியில்

ஊர் பிரிந்தோம்

எடுத்துவர மறந்த பொருட்களில்

நமது காதல் கடிதங்களும் அடங்கிற்று

நம் நிலத்தை திருட அவர்கள் சொன்ன

ஆயிரம் பொய்க்காரணங்களில்

உனதும் எனதும் காதல் செத்துக்கொண்டிருந்தது

நான் மண்ணையும் உன்னையும் பிரிந்தேன்

பின்பொருநாளில்

வாலிபம் தொய்வுற்ற அந்தியொன்றில்

நீ என்னைக்கடந்திருந்தாய்

ஒரு கடைத்தெரு

வெறித்த சாலை

மூச்சிறுகிய திருவிழாக்கூட்டம்

இப்படி ஏதோ ஒன்றில் அது நிகழ்ந்திருக்கும்

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ள

நம் உடல்கள் நகர்ந்தன

உனது கைக்குழந்தையின் அழுகையை

சரி செய்யும் அவகாசத்தில்

என்னை மறந்திருப்பாய்

நாம் நடந்த தெருக்கள்

நிழல்வாகை மரம் காளிகோயில் இப்படி

எதுவும் இன்று என்னிடமில்லை

நமது காதலின் சாட்சிகளாக

நம் காதல் தெருக்கள் இன்று பாழடைந்திருக்கும்

நிலத்தை அள்ளும் பேய்கள் உலவும் நகரங்களில்

காதலில்லை

ஊரின் சாட்சியாகவும் உனது நினைவாகவும்

எனக்கென்று இப்போதிருப்பது

ஒரு அகதிக்கூடாரம் மட்டும்தான்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket