இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 14 மார்ச், 2011

எனது குழந்தைகளுக்காக பிராத்திக்கிறேன்

திங்கள், 14 மார்ச், 2011

அப்பாவித்தனமான முகத்தோடு

சற்றும் சலனமற்று சிரிக்கிறார்கள்

எங்கள் குழந்தைகள்

என்னில் உப்பிக் கிடக்கும்

அதே கேள்விக்குறியின் நிழல் கவிந்திருப்பதாய்

அவர்களுக்கு இன்னும் புலப்படாத பேருண்மையை

அந்த புன்னகையில் நான் காண்கிறேன்

வேலியோணானை சுருக்கிடுவதும்

தும்பியின் வாலில் முடிவதுமென

அவர்கள் உலகம் என்னில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது

சில குழந்தைகள் சைக்கிள் டயரை உருட்டி ஓடுகிறார்கள்

மண் சோறு ஆக்குவதிதிலும்

முடிதும்பை பூவில் இடியப்பம் செய்வதிலும்

அவர்கள் லயித்து விடுகிறார்கள்

அடுக்கப்பட்ட சிறட்டைகள் மீது குறிபார்த்து எறிவதில்

எனது பக்கத்து கூடாரத்து சிறுவன் தேர்ந்து வருகிறான்

நானும் முன்பொருநாள்

இவர்களைப் போலவே இருந்திருக்கிறேன்

கவலைகளற்ற பெரு வெளிகளில் ஊதாரித்திருக்கிறேன்

என்பதை நினைக்கையில்

அனுமதியின்றியே மனம்

குழந்தை இறக்கைகளை பொருத்தி பறக்கிறது

அவர்களிடம் அகதிக் கூடாரத்தில் வாழும்

குற்ற உணர்ச்சி இல்லை

திரும்பி வராத அப்பாவை பற்றிய

ஆராய்ச்சிகள் இல்லை

பொம்மைகளை குளிப்பாட்டி மகிழ்கிறார்கள்

இன்னும் அவர்கள் கேள்வி கேட்க தொடங்கவில்லை

இப்போதைக்கு மகிழ்ச்சி அவர்களிடம் மட்டுமே இருக்கிறது

காட்சிப்பிழைகளை காண்பிக்கும்

எனது பூதக்கண்களுக்கு மட்டும்

அவர்களின் தோள்மீது சுமக்கமுடியாத

ஏதோ ஒரு பாரம் இருப்பதாய் படுகிறது

எனினும் அந்தக் குழந்தை

பொம்மைகளைக் குளிப்பாட்டிகொண்டிருக்கிறது

காலம் எந்த சுமையையும் அவர்கள் மீது

சுமத்தாதிருக்கக் கடவக

என்னைக் காக்காத கடவுள்களிடம்

அடிமனம் வேண்டிக்கொள்கிறது

அந்த குழந்தைகளுக்கு வாலிபத்தை அளிக்காதே

குழந்தைத்தனத்தை பறிக்காதிரு

அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்

இனமும் வேண்டாம்

தனியான அடையாளங்கள் தேவையில்லை

அவர்களை அவர்களாக இருக்க விடு

பொம்மைகளோடும் தும்பிகளோடும்

அவர்கள் மகிழட்டும்

காலமே மறந்தும் அந்த பிஞ்சுகள் கையில்

துப்பாக்கியொன்றை திணித்து விடாதே

அந்த சிறுவன் சிறட்டைகள் மீது குறிபார்க்கிறான்

1 comments:

anamika சொன்னது…

//அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்

இனமும் வேண்டாம்

தனியான அடையாளங்கள் தேவையில்லை//

துன்பங்கள் வரும் போகும் அதற்காக தனித்துவமான எங்களுக்கென்ற அடையாளங்களை தேவையில்லை என்று சொல்ல முடியாது.....

கருத்துரையிடுக

 
◄Design by Pocket