அப்பாவித்தனமான முகத்தோடு
சற்றும் சலனமற்று சிரிக்கிறார்கள்
எங்கள் குழந்தைகள்
என்னில் உப்பிக் கிடக்கும்
அதே கேள்விக்குறியின் நிழல் கவிந்திருப்பதாய்
அவர்களுக்கு இன்னும் புலப்படாத பேருண்மையை
அந்த புன்னகையில் நான் காண்கிறேன்
வேலியோணானை சுருக்கிடுவதும்
தும்பியின் வாலில் முடிவதுமென
அவர்கள் உலகம் என்னில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது
சில குழந்தைகள் சைக்கிள் டயரை உருட்டி ஓடுகிறார்கள்
மண் சோறு ஆக்குவதிதிலும்
முடிதும்பை பூவில் இடியப்பம் செய்வதிலும்
அவர்கள் லயித்து விடுகிறார்கள்
அடுக்கப்பட்ட சிறட்டைகள் மீது குறிபார்த்து எறிவதில்
எனது பக்கத்து கூடாரத்து சிறுவன் தேர்ந்து வருகிறான்
நானும் முன்பொருநாள்
இவர்களைப் போலவே இருந்திருக்கிறேன்
கவலைகளற்ற பெரு வெளிகளில் ஊதாரித்திருக்கிறேன்
என்பதை நினைக்கையில்
அனுமதியின்றியே மனம்
குழந்தை இறக்கைகளை பொருத்தி பறக்கிறது
அவர்களிடம் அகதிக் கூடாரத்தில் வாழும்
குற்ற உணர்ச்சி இல்லை
திரும்பி வராத அப்பாவை பற்றிய
ஆராய்ச்சிகள் இல்லை
பொம்மைகளை குளிப்பாட்டி மகிழ்கிறார்கள்
இன்னும் அவர்கள் கேள்வி கேட்க தொடங்கவில்லை
இப்போதைக்கு மகிழ்ச்சி அவர்களிடம் மட்டுமே இருக்கிறது
காட்சிப்பிழைகளை காண்பிக்கும்
எனது பூதக்கண்களுக்கு மட்டும்
அவர்களின் தோள்மீது சுமக்கமுடியாத
ஏதோ ஒரு பாரம் இருப்பதாய் படுகிறது
எனினும் அந்தக் குழந்தை
பொம்மைகளைக் குளிப்பாட்டிகொண்டிருக்கிறது
காலம் எந்த சுமையையும் அவர்கள் மீது
சுமத்தாதிருக்கக் கடவக
என்னைக் காக்காத கடவுள்களிடம்
அடிமனம் வேண்டிக்கொள்கிறது
அந்த குழந்தைகளுக்கு வாலிபத்தை அளிக்காதே
குழந்தைத்தனத்தை பறிக்காதிரு
அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்
இனமும் வேண்டாம்
தனியான அடையாளங்கள் தேவையில்லை
அவர்களை அவர்களாக இருக்க விடு
பொம்மைகளோடும் தும்பிகளோடும்
அவர்கள் மகிழட்டும்
காலமே மறந்தும் அந்த பிஞ்சுகள் கையில்
துப்பாக்கியொன்றை திணித்து விடாதே
அந்த சிறுவன் சிறட்டைகள் மீது குறிபார்க்கிறான்
1 comments:
//அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்
இனமும் வேண்டாம்
தனியான அடையாளங்கள் தேவையில்லை//
துன்பங்கள் வரும் போகும் அதற்காக தனித்துவமான எங்களுக்கென்ற அடையாளங்களை தேவையில்லை என்று சொல்ல முடியாது.....
கருத்துரையிடுக