இருத்தல் என் சுதந்திரம்

வெள்ளி, 18 மார்ச், 2011

வீடுகளில் நிரம்பிய குழிகளின் நகரம்

வெள்ளி, 18 மார்ச், 2011

நான் அகற்றப்பட்டதோர் நாளில்

அவர்கள் எனது நிலத்தை தோண்டினர்

நிலத்தை அள்ளி அணைகளை அமைத்தனர்

சனங்க்களற்ற தெருக்களில்

அவர்கள் மட்டும் நடமாடினர்

ஆழக்குழிகளை நிரப்ப எஞ்சியிருந்த எங்கள் வீடுகளையும்

இடித்துத் தள்ளினர்

இறந்துவிட்ட பின்னும் எங்கள் வீடுகளில் குடியிருந்த

மூதாதயர்களின் ஆன்மாக்களின்

ஓலச்சத்தத்தை பொருட்படுதாமலும்

அவர்கள் அதை செய்து முடித்தனர்

சிறுவயதில் செத்துப்போய் புகைப்படமென

சுவரில் தொங்கிய எனது தங்கையும் அழுதிருப்பாள்

அவர்கள் இடித்து புதைத்த போது

அவளது புகைப்படம் மூச்சித்திணறியிருக்கும்

ஏற்கனவே புதைக்கப்பட்டவர்களை அவர்கள்

மீண்டும் புதைத்தனர்

வீடுகளில் குழிகள் நிரம்ப

வனாந்தர வெளியென்றானது பெரு நிலம்

முன்பெப்போதும் எங்களின் வாழ்வில்லாதபடி

அனைத்தையும் புதைக்க அரசன் ஆணையிட்டான்

நடு ஊரில் நாங்கள் நட்ட அரச மரத்தை மட்டும்

பாதுகாத்தனர்

நாங்கள் நட்ட அரச மரத்தில் அவர்களின்

நூற்றாண்டுகால வாழ்வை புனைந்தனர்

அந்த புனைவில் பராக்கிரம பாகுவும் பண்டுகாபயனும்

எங்கள் ஊருக்குள் வந்து போயினர்

குளக்கோட்டன் அக்ரபோதியானான்

காளியப்பு நட்ட அரச மரக்கிளைகளில்

சங்கமித்தையின் பறவைகள் அமர்ந்தன

அரசன் எனது நிலத்தை கூவிக்கூவி விற்றான்

ஊரின் சனங்கள் கூடாரங்களில் ஒதுங்கினர்

காற்றையும் மறித்தெழுந்திருக்கிறது மண்ணணை

ஊர் செல்லும் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்

நிலத்துக்குரியவர்கள்

நிலத்தை அள்ளும் கரத்தின் நிழல்

இன்னும் அகலமாய் படர்கிறது

நிலத்தின் கீழே புகைப்படத்தில் புதைந்துபோன

எனது தங்கயின் குரல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

தன்னுடன் எடுத்துவராத மகளின் புகப்படத்தின்

கவலையில் உறைகிறாள் அம்மா

2 comments:

வளத்தூர் தி.ராஜேஷ் சொன்னது…

அருமை நண்பரே.

ம.தி.சுதா சொன்னது…

மனதை அழுத்தும் அருமையான வரிகளுங்கோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

கருத்துரையிடுக

 
◄Design by Pocket