மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு
வனாந்தரப்பகல் ஒன்றில்
வெறிச்சோடிய மயானத்தெருவினூடு
எனது பிணத்தை அவர்கள்
சுமந்து சென்றனர்
வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்
எனது திமிரும் வைராக்கியமும்
பெருந்தோள் வீரமும்
தேசத்தின் மீதென் காதலும்
சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது
சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்
நான் முளைத்தேன்
அதுவரை நிறங்களற்றிருந்த நான்
சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்
எல்லாமாகிக் கலந்த என்னை
வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு
பலர் கடந்து சென்றனர்
எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது
சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்
வானம் என்னை அழுதது
நான் வானத்தை சிரித்தேன்
போர்க்குணத்தோடு என் கவிதைகளை
ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்
எனது நாலைந்து சொற்களை காற்று
முதுகில் ஏற்றி அலைந்தது
எனது மீதிப்பகலை அந்திரத்து
மர்ம வெளிகளில் பூசினேன்
வெறித்துச் சோம்பிய முகங்களுடன்
வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே
நெரிசல்களை நீவி
அவர்கள் சுமந்து சென்ற என் உடலை
பாத்துக்கொண்டிருந்தேன்
எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க
நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்
என்னைக் கடந்து சென்ற எனது பிணம்
0 comments:
கருத்துரையிடுக