இருத்தல் என் சுதந்திரம்

வெள்ளி, 11 மார்ச், 2011

என்னைக் கடந்த நான்

வெள்ளி, 11 மார்ச், 2011

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket