இருத்தல் என் சுதந்திரம்

வெள்ளி, 18 மார்ச், 2011

வீடுகளில் நிரம்பிய குழிகளின் நகரம்

வெள்ளி, 18 மார்ச், 2011 2

நான் அகற்றப்பட்டதோர் நாளில்

அவர்கள் எனது நிலத்தை தோண்டினர்

நிலத்தை அள்ளி அணைகளை அமைத்தனர்

சனங்க்களற்ற தெருக்களில்

அவர்கள் மட்டும் நடமாடினர்

ஆழக்குழிகளை நிரப்ப எஞ்சியிருந்த எங்கள் வீடுகளையும்

இடித்துத் தள்ளினர்

இறந்துவிட்ட பின்னும் எங்கள் வீடுகளில் குடியிருந்த

மூதாதயர்களின் ஆன்மாக்களின்

ஓலச்சத்தத்தை பொருட்படுதாமலும்

அவர்கள் அதை செய்து முடித்தனர்

சிறுவயதில் செத்துப்போய் புகைப்படமென

சுவரில் தொங்கிய எனது தங்கையும் அழுதிருப்பாள்

அவர்கள் இடித்து புதைத்த போது

அவளது புகைப்படம் மூச்சித்திணறியிருக்கும்

ஏற்கனவே புதைக்கப்பட்டவர்களை அவர்கள்

மீண்டும் புதைத்தனர்

வீடுகளில் குழிகள் நிரம்ப

வனாந்தர வெளியென்றானது பெரு நிலம்

முன்பெப்போதும் எங்களின் வாழ்வில்லாதபடி

அனைத்தையும் புதைக்க அரசன் ஆணையிட்டான்

நடு ஊரில் நாங்கள் நட்ட அரச மரத்தை மட்டும்

பாதுகாத்தனர்

நாங்கள் நட்ட அரச மரத்தில் அவர்களின்

நூற்றாண்டுகால வாழ்வை புனைந்தனர்

அந்த புனைவில் பராக்கிரம பாகுவும் பண்டுகாபயனும்

எங்கள் ஊருக்குள் வந்து போயினர்

குளக்கோட்டன் அக்ரபோதியானான்

காளியப்பு நட்ட அரச மரக்கிளைகளில்

சங்கமித்தையின் பறவைகள் அமர்ந்தன

அரசன் எனது நிலத்தை கூவிக்கூவி விற்றான்

ஊரின் சனங்கள் கூடாரங்களில் ஒதுங்கினர்

காற்றையும் மறித்தெழுந்திருக்கிறது மண்ணணை

ஊர் செல்லும் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்

நிலத்துக்குரியவர்கள்

நிலத்தை அள்ளும் கரத்தின் நிழல்

இன்னும் அகலமாய் படர்கிறது

நிலத்தின் கீழே புகைப்படத்தில் புதைந்துபோன

எனது தங்கயின் குரல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

தன்னுடன் எடுத்துவராத மகளின் புகப்படத்தின்

கவலையில் உறைகிறாள் அம்மா

திங்கள், 14 மார்ச், 2011

எனது குழந்தைகளுக்காக பிராத்திக்கிறேன்

திங்கள், 14 மார்ச், 2011 1

அப்பாவித்தனமான முகத்தோடு

சற்றும் சலனமற்று சிரிக்கிறார்கள்

எங்கள் குழந்தைகள்

என்னில் உப்பிக் கிடக்கும்

அதே கேள்விக்குறியின் நிழல் கவிந்திருப்பதாய்

அவர்களுக்கு இன்னும் புலப்படாத பேருண்மையை

அந்த புன்னகையில் நான் காண்கிறேன்

வேலியோணானை சுருக்கிடுவதும்

தும்பியின் வாலில் முடிவதுமென

அவர்கள் உலகம் என்னில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது

சில குழந்தைகள் சைக்கிள் டயரை உருட்டி ஓடுகிறார்கள்

மண் சோறு ஆக்குவதிதிலும்

முடிதும்பை பூவில் இடியப்பம் செய்வதிலும்

அவர்கள் லயித்து விடுகிறார்கள்

அடுக்கப்பட்ட சிறட்டைகள் மீது குறிபார்த்து எறிவதில்

எனது பக்கத்து கூடாரத்து சிறுவன் தேர்ந்து வருகிறான்

நானும் முன்பொருநாள்

இவர்களைப் போலவே இருந்திருக்கிறேன்

கவலைகளற்ற பெரு வெளிகளில் ஊதாரித்திருக்கிறேன்

என்பதை நினைக்கையில்

அனுமதியின்றியே மனம்

குழந்தை இறக்கைகளை பொருத்தி பறக்கிறது

அவர்களிடம் அகதிக் கூடாரத்தில் வாழும்

குற்ற உணர்ச்சி இல்லை

திரும்பி வராத அப்பாவை பற்றிய

ஆராய்ச்சிகள் இல்லை

பொம்மைகளை குளிப்பாட்டி மகிழ்கிறார்கள்

இன்னும் அவர்கள் கேள்வி கேட்க தொடங்கவில்லை

இப்போதைக்கு மகிழ்ச்சி அவர்களிடம் மட்டுமே இருக்கிறது

காட்சிப்பிழைகளை காண்பிக்கும்

எனது பூதக்கண்களுக்கு மட்டும்

அவர்களின் தோள்மீது சுமக்கமுடியாத

ஏதோ ஒரு பாரம் இருப்பதாய் படுகிறது

எனினும் அந்தக் குழந்தை

பொம்மைகளைக் குளிப்பாட்டிகொண்டிருக்கிறது

காலம் எந்த சுமையையும் அவர்கள் மீது

சுமத்தாதிருக்கக் கடவக

என்னைக் காக்காத கடவுள்களிடம்

அடிமனம் வேண்டிக்கொள்கிறது

அந்த குழந்தைகளுக்கு வாலிபத்தை அளிக்காதே

குழந்தைத்தனத்தை பறிக்காதிரு

அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்

இனமும் வேண்டாம்

தனியான அடையாளங்கள் தேவையில்லை

அவர்களை அவர்களாக இருக்க விடு

பொம்மைகளோடும் தும்பிகளோடும்

அவர்கள் மகிழட்டும்

காலமே மறந்தும் அந்த பிஞ்சுகள் கையில்

துப்பாக்கியொன்றை திணித்து விடாதே

அந்த சிறுவன் சிறட்டைகள் மீது குறிபார்க்கிறான்

நீயென்றான பெருவெளி

நீ என்னை கடந்த தெருக்களில்

எனது யுகங்களைக் கரைக்கிறேன்

சப்தங்களின்றி நீ சொரிந்து போன பாசைகளில்

ஒரு சமுத்திரம் விம்பிக்கிறது

எனது போர்குணச் சாயலில் நீ

பூக்களை கொய்து கொண்டிருக்கிறாய்

அருகில் விலகி தூரத்து புள்ளியொன்றில்

உன்னை அன்மிக்கிறேன்

வடு நிறைந்த நெஞ்சில் உனது

துளிர்த்தலின் சாத்தியத்தை வியக்கிறேன்

நமக்கு வழங்கப்பட்ட அவகாசங்கள்

தீர்ந்தபடியே இருக்கிறது

வெறும் மெளனங்களில் ஒட்டிவிட்ட நீ

எனது வார்த்தைகளை பிடுங்குகிறாய்

நாளை பற்றிய ஏக்கங்கள் நிறைந்த

நமது வாழ்வின் நிர்ப்பந்தத்தில் இருவருக்கிடையேயும்

இன்னும் நீழ்கிறது சீனத்து பெருஞ்சுவர்

ஓய்ந்துவிட்ட மழைப் பொழுதில்

பீலியில் தங்கி நின்று நிலத்தில் வீழும்

மழைத்துளியொன்றின் பரிதாபத்தோடு

ஒவ்வொரு கணமும் வீழ்கின்றன

என்னில் தேங்கிய நீ

உன்னில் மூழ்கிவிடாதிருக்கும் பிராத்தனையில்

நீ என்ற குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது

எனது வெற்றுப் படகு

வெள்ளி, 11 மார்ச், 2011

சூரியனைச் சினேகித்தல்

வெள்ளி, 11 மார்ச், 2011 0

மூழ்காத சமுத்திரத்தில் மூழ்கி

தினம் எழுந்து

நாளாந்தம் என் வாசலிலே

வந்துதிக்கும் சூரிய தேவனே

இன்னும் ஆறாத நெடுந்துயரின் பாரத்தை

தோளாறத் தூக்கி வைக்க

எனக்கிங்கு மனிதரில்லை

எக்கணமும் மாறாது நீதான்

புலர்பொழுதில் வந்துந்தன் கதிர்க்கரத்தால்

மேனியெல்லாம் நனைக்கின்றாய் அதனால்

உன்னை நம்பத்துணிகின்றேன்

விடி பொழுதில் பனிப்புகையை குடித்து விட்டு

வந்தமரு

இரு தேனீர்க்கோப்பைச் சந்திப்பில்

என்னைத் திறக்கின்றேன்

ஊர் அலைந்து திரிபவன் நீ

ஊரிழந்து அலைபவன் நான்

உனக்கு யாதும் ஊரே

எனக்கு ஏதும் ஊரில்லை

சரித்திரங்கள் கண்டவன் நீ

சரித்திரம் சாய தரித்திரம் பிடித்தவன் நான்

இத்தியாதி வித்தியாசங்களுள்ளும்

உன்னை நம்பத்துணிகின்றேன்

முதல் தேனீர் கோப்பையில்

நம் முரண்பாடுகளைக் களைவோம்

என் பெரு நிலத்தை நீ அறிவாய்

நான் விட்டுவந்த என் முற்றமும் உனக்கு

புதிதல்ல

அன்று நானும் அங்கிருந்தேன்

நீயும் இருந்தாய்

இன்று நானில்லை நீயிருக்கிறாய்

எனது மண்ணை அறியும் ஆவலில்

தேங்கி வழிகிறது மனம்

நாளாந்தம் நீ கண்டுவந்த செய்திகளை

சொல்லிவிடு எந்தனுக்கு

வில்லுக்குளத்தில் தாமைரைகள் பூத்ததா

வாசல் ஒட்டுமாவில் அணில்கள் தாவினவா

முற்றத்து மல்லிகை பூத்துச் சொரிந்ததா

தென்னைகளில் தேங்காய்

குலை குலையாய் விழுகிறதா

தங்கை நட்ட பூ மரங்கள்

கருகிவிட்டனவா

வாசலில் அறுகு படர்ந்து அடர்கிறதா

முச்சந்திப் புளியடியில் பேய்கள் உறைகிறதா

விட்டுவந்த வெள்ளைப் பசு

கன்றேதும் ஈன்றதுவா

என் பிரிவை தாங்காத பெரு நிலத்தாய்தான்

அழுது தொலைத்தாளா

ஏதுமறியாதோர் இருள் வெளியில் இருக்கின்றேன்

மேய்ப்பானுமில்லை மேச்சல் நிலமில்லை

மாயக்கதைகளுக்குள் புதைகின்றேன்

மானிடர்கள் திரித்துவிடும் புரளிகளின்

உண்மைகளை நீயறிவாய்

என் மேய்ச்சல் நிலப்பக்கம் சென்றாயா

மேய்ப்பானை எங்கேனும் கண்டாயா

நாளை குறு நடையில் என் பொன்னிலத்தை

கடக்க நேர்ந்தால் அதனிடத்தில்

ஊர் நினைவில் உக்கி ஊனழிந்து

உயிரணுக்கள் உருக்குலைந்து இற்றுவிட்ட மனதுடனே

உடல் தழுவ காத்திருக்கும்

என் நிலையை சொல்லிவிடு

மேய்ப்பானைக் கண்டால் சாப்பொழுதில் ஒருதடவை

முகம் காட்ட பரிந்துரை செய்

பரிதிக் கடவுளே

உன்னை நம்பத்துணிகின்றேன்

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

 
◄Design by Pocket