போர்வைக்குள் வினாக்குறியைப்போல
சுருண்டுகிடக்கும்
என் உடல் சூட்டின் கதகதப்பில்
இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது
நகரம் எரிந்து
காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்
பகலை விடவும் இரவுகளில்தான்
உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன
நாசியில் புகும் துகள்களில் எல்லாம்
எனது தொன்மத்தை நுகர்கிறேன்
அவற்றில் வார்த்தைகளற்ற
பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை
ஒரு சாகரத்தைப் போல
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன
ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்
ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்
தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்
செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது
கற்குவியல்களுக்குள்
தொலைந்து போன நான்
தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்
காலம் என்னைச் சூதாடியிருக்கிறது
நாடு நகர் தோற்றாயிற்று
பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை
அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை
நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்
இரவும் அப்படியே
நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்
கண்ணகி திருகிய முலையில்
இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்
உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்
வேறென்ன செய்ய
எனது நூற்றுக்கணக்கான
பத்தினிப்பெண்களின் மார்புகள்
அறுத்தெறியப்பட்ட போதும்
இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது
எனது தேசத்தில் நெருப்பு
0 comments:
கருத்துரையிடுக