வாழ்வின் கரைகளில் சதா மடிந்து
அழுதுயிர்கின்றன அலைகள்
நீளமாய் இன்னும் நீளமாய் இடையறாது
என் மனதில் ஒலிக்கிறது துயரின் பாடல்
அலக்கழிக்கப்பட்ட காற்றின் சொற்களில்
மொழிதல் ஏதுமற்று நனைகிறேன் நான்
முகமற்றிருக்கின்றன காலமும் காற்றும் நானும்
ஓய்வற்று வாழ்வை மோகித்தழுகிறது என் பாடல்
மெளனத்தை யாரோ என் மீது பூசி விட்டு போகிறார்கள்
அதை உடைத்து பிரவாகிக்கிறது உள்ளிருந்து உயிர்
வானம் நிறமற்றிருக்கிறது என்னில்
மனதில் எழும் நீளப்பாடல்களில் ஒன்று
நாளை பற்றியதாக இருக்காலாம்
வெற்றுடலை சுமந்தலையும் சலிப்பில்
விறைக்கிறது குதிகால்களில் ஒன்று
நான் என்னும் பிண்டம் தொலையாதிருக்க
சொற்களைத்தேடுகிறேன்
தேடித்தொலையும் விதி இன்னும் கைப்படவில்லை
காலத்தின் முடிவுறாக்கரைகளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவடுகள்
சுவர்க்கடிகாரத்தின் முட்களில்
நொடி நொடியாய் கசிகிறது
அள்ள அள்ள தீர்ந்து போகாத கனவு
சிலந்தி பூச்சியை போல காலம்
மிக இயல்பாய் வலைகளை நெய்துகொண்டிருக்கிறது
சிக்கிவிடாதிருக்கும் சூக்குமங்களில்
சிக்கிக்கொண்டிருக்கிறேன் நான்
0 comments:
கருத்துரையிடுக