காலம் என்னை தனது கூண்டில் நிறுத்தி
சாட்சியத்தைத் திணிக்கிறது
எனது கண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது
இது என்னினத்தின் முதுமைகளின் பங்கு
மழைவிட்ட பின்பு இலையில் தொங்கிக்கொண்டிருக்கும்
மழைத்துளி ஒன்றின் கடைசி நம்பிக்கையாய்
கூன் விழுந்து குருடு தட்டிய காலத்திலும்
விடுதலைக்காக காத்திருந்த தாத்தாக்களே பாட்டிகளே
இன்று உங்களுக்காக அழுகிறேன்
நீங்கள் வடித்த முதுமைக் கண்ணீர்
என்னை சுடுகிறது என்னை சபிக்காதீர்கள்
கழியாமல் இருக்கும்
என் மீதிக்காலத்திற்காக பிராத்தியுங்கள்
நீங்கள் துணியாத ஒன்றிற்காக நாங்கள் துணிந்தோம்
உங்கள் தவறுகளைச் சரி செய்வதாகவும் அது இருந்தது
உங்கள் பிள்ளைகளும் பேரர் பேத்திகளும்
கண்முன்னே வீழ்ந்தபோதெல்லாம்
அவர்களின் ரத்தச்சிவப்பில் விடியலின் வானம்
சிவந்து கருக்கொள்வதாய் தேற்றிக்கொண்டீர்கள்
அடிமைக்காற்றில் அழுக்காகிப்போன
உங்கள் சுவாசப்பையை உயிர் அகலும் காலத்துள்
ஒருநொடிப் பொழுதேனும்
சுதந்திரக்காற்றை மூச்சுமுட்ட உள்ளிழுத்து
கறைச்சுவரை கழுவி விட
நீங்கள் காத்திருந்ததில் நியாயமிருக்கிறது
உங்களில் விழுந்திருக்கும்
நிமிர்த்தமுடியாத கூனைப்போலவே இருந்தது
எங்கள் விடுதலை
இருந்தும் தியாகத்தை சொரிந்தோம்
ரவைக்கூடுகள் காலியாகும் வரை இருந்தது
எங்களின் நெடும் பயணம்
யாரிடமும் கையேந்தாத வைராக்கியத்தை
பாலுடன் ஊட்டியது நீங்கள்
அதனால்தான் எங்கள் விடுதலை கையேந்தாதிருந்தது
எம்மில் விழுந்திருக்கும் போரின் காயங்களை விட
உங்களில் விழுந்த வாழ்வின் காயங்கள் வலியதுதான்
ஊரிழந்து மனையிழந்து கூடாரம் ஒன்றிற்குள்
சுருண்டு படுத்தபடி நீங்கள் விடும்
பெருமூச்சின் வெம்தணலில் அநீதி கருகட்டும்
ஊர்செல்லும் காலத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து
உயிர் பிரிந்து சென்று விட்ட உங்களைப்போன்ற
மூப்புற்ற ஆன்மாக்களின் பரிதாபமே
அடி நெஞ்சில் கனக்கிறது
எங்களின் முதுமை எங்கள் மகன்களிடம்
கண்ணீரை பரிசளிக்கக் கூடாது என்பதற்காகவே
இத்தனை பாடுபட்டோம்
உங்கள் முதுமை எம்மை மன்னிக்கட்டும்
நாங்கள் மனிதர்களிடம் தோற்கவில்லை
காலத்திடம் தோற்றோம்
எங்கள் தோல்வி
எங்களின் இயலாமைகளில் இருக்கவில்லை
காலத்தின் இயலுமைகளில் இருந்தது
0 comments:
கருத்துரையிடுக