இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 30 டிசம்பர், 2010

இராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் - 2

வியாழன், 30 டிசம்பர், 2010 0

கடிதங்களில் உன்னை காயப்படுத்துவது

எனது நோக்கங்களில் ஒன்றல்ல

உனது காக்கியுடையும் துப்பாக்கியும்

எனக்குள் வெறுப்பையே ஏற்படுத்துகிறது

அவற்றில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்

உனது கையில் இருக்கும் அதை பார்க்கும் போது

எனது உறவுகளின் அழுகுரல் மட்டுமே கேட்கிறது

உனது வறுமை துப்பாக்கியை ஏந்த வைத்ததாக

முன்பொருமுறை சொல்லியிருக்கிறாய்

அப்படியாயின் நீ நிகழ்த்திய வகைதொகையற்ற

கொலைகளும் அதன் பொருட்டே இருந்திருக்கும்

நீ சிந்தவைத்த தமிழ் ரத்தங்களில்

உனது வறுமை கழுவப்பட்டிருப்பின்

உன்னால் கொலையுண்ட எனது உறவுகள்

சொர்க்கத்தையடைய பிராத்தி நானும் பிராத்திக்கிறேன்

இப்போது நீ விடுமுறையில் அடிக்கடி

சென்று வந்திருப்பாய்

நான் செல்ல எனக்கு ஊரில்லை வீடுமில்லை

உனது அரசன் எனது நிலதைப்பறித்தான்

நானும் நீயும் வேறானவர்கள் என்பதை

உனது அரசனே அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருக்கிறான்

நீ விடுமுறையில் கொண்டுசென்ற பொருட்களில்

எனது வீட்டிலிருந்தும் ஏதாவது இருந்திருக்கும்

எனது ஊரில் இருந்தே உன்கடிதம்

முகவரியிடப்பட்டிருந்தது

அதனால் முடியுமெனில் எனது வீட்டுக்கு

சென்றுவருவாயா

நெடு வீதியில் முச்சந்தியொன்றில்

நெட்டென வளர்ந்த நிழல்வாகை மரமுண்டு

அதன் அருகே பாளடைந்த

பிள்ளையார் கோயிலின் பின்னால் இருக்கும்

இரண்டாவது வீடு என்னுடயது

பழைய வீடுதான் முன்சுவர் இடிந்துகிடப்பதாய் அறிந்தேன்

சில வேளை நீயே குண்டுருவிப் போட்டிருப்பாய்

எனது வீட்டை சுற்றிப்பார்

மறக்காமல் எனது முற்றத்தில்

ஒரு பிடி நிலத்தை அள்ளி பொதிசெய்து அனுப்பு

உனக்கும் தெரியும் அது வெறும் மண்ணல்ல

எங்கள் உயிர் எங்கள் வாழ்வை

அந்தமண்ணுக்காகவே இழந்தோம்

பல்லாயிரம்பேர் மண்ணை உச்சரித்தே மாய்ந்தார்கள்

அகதிமுகாமில் பிறந்த எனது சித்தியின் மகன்

தனது ஊரைப்பற்றி இப்போது அடிகடி என்னிடம் கேட்கிறான்

சம்பூர் எப்படியிருக்கும் அதன் நிறமென்ன

ஏன் அதை பறிகொடுத்தீர்கள்

இப்படி கேள்விகளால் என்னைத் துளைக்கிறான்

இப்போது எனது கவலை

எனது மகன் என்னிடம் கேட்கப்போகும்

இதே கேள்விகளைப் பற்றியதுதான்

அதனால் நீ அனுப்பும் எனது பிடிநிலத்தில்தான்

எனது பூர்வீகத்தின் முகத்தையும்

எனது புனித நிலத்தையும்

அவர்களுக்கு காட்டவேண்டும்

உனது அரசன் பறித்த

எனது பத்தாயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து

ஒரு பிடி நிலத்தையாவது பொதிசெய்து அனுப்பு

அரசனின் மரணமும் தேனீர்ச்சந்திப்பு

நிஜங்களை விட இப்போதெல்லாம்

கனவுகள் அழகானவை

வாழ்வின் புதிர்களெல்லாம்

கனவுகளில் மட்டுமே அவிழ்கின்றன

நேற்றய கனவில் ஒரு அரசன் இறந்து கிடந்தான்

மரணச்சடங்கில் நானும் இருந்தேன் என்பதால்

என்னில் அவன் தொடர்புபட்டிருந்திருப்பான்

உயிரோடிருந்த போது அவனைப் பற்றி

பெருங்கதைகள் உலாவின

அவனது கைகள் மிக நீளமாக இருந்தது

நிலங்களை பறித்தான்

பூர்வீக குடிகளை துரத்தினான்

தனது சேனையால் ஒரு இனத்தினை அழித்தான்

கால்களை முடமாக்கி விட்டு

பாலமமைத்தான் வீதிகளை செப்பனிட்டான்

சொத்துக்களை சேர்த்தான் இப்படி ஏகப்பட்ட கதைகள்

இவற்றில் உண்மையில்லை

மரணத்தின் பின் அவது கைகளில் எதுவுமிருக்கவில்லை

சுடலைக்கு அவனை கொண்டு சென்றனர்

விறகுகள் அடுக்க சாம்பலானான்

பறித்த நிலங்களில் ஒரு துண்டும் அவனுக்கில்லை

புதிர்கள் அவிழ கனவு முடிந்தது

அதிகாலைத் தேனீர்ச்சந்திப்பில்

நண்பர் ஒருவர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்

எனது அரசன் இப்போது

நிலங்களை பறிப்பதாகவும்

வீதிகளை செப்பனிடுவதாகவும்

நான் தேனீரை மிக விரும்பி

சுவைத்துக் கொண்டிருந்தேன்

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

மழைக்காக தவளைகள் அழுகின்றன

அதன் குரல்களில் மரணம் வழிகிறது

அம்மா நீயும் அழுது கொண்டிருக்கிறாய்

மழையில் உறைந்த இரவின் ஆர்ப்பரிப்பை நீவி

எனக்குள் கேட்கிறது உன் குரல்

மழைப்பொழிவை தாங்காத நம் அகதிக்கூடாரம்

அதன் இயலாமையின் ஓட்டைகளால் அழுகிறது

உன்னிடம் இருக்கும் எல்லாப்பாத்திரங்களிலும்

கொட்டில் அழுதூற்றும் கண்ணீரை ஏந்துகிறாய்

உனது கண்ணீரை நான் எந்தப்பாத்திரத்தில் ஏந்த

எருமை மாடுகளுக்கு பிரியமான சகதியை

காலம் நமக்குள் திணித்திருக்கிறது

சேறும் சகதியுமான நம் கூடாரத்துக்குள்ளும்

நீ இரவுக்கான உணவை தயார் செய்கிறாய்

சோற்றில் உப்பாகிக் கலக்கிறது உனது கண்ணீர்

மழைக்காலம் முன்பு போல் என்னை மகிழ்விப்பதில்லை

நடுக்கத்தை விரும்பி ஓடி வந்து இப்போதெல்லாம் நான்

உன் மடியில் சுருண்டு படுப்பதில்லை

அம்மா குளிரிலும் என்னுடல் இப்போது வியர்க்கிறது

நிலத்தில் ஊரும் அட்டைகள் என்னில் ஊர்வதாய்

புளிக்கிறது என்னுடல்

மனம் மட்டும் சிறு கூதல் காற்றிலும்

பூச்சியப்பெறுமானத்தில் உறைந்து சுருழ்கிறது

அம்மா நீ அழுதுகொண்டிருக்கிறாய்

வெளிப்படாத உன் குரல்

தவளைகளின் சத்தத்தை மீறியும் என்னை கொல்கிறது

பறிக்கப்பட்ட உனது நிலத்துக்காகவும்

மழைக்காலம் பறித்த உன் தூக்கத்திற்காகவும்

வானத்தோடு சேர்த்து நீயும்

ஐந்து மார்கழிகள் அழுதுவிட்டாய்

அம்மா நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

கண்ணீரற்ற கண்களால்

நிலத்தை பறித்தவன் மீதும்

வீட்டை இடித்தவன் மீதும்

மழையின் மீதும் அழாதே

நீ அழ வேண்டியது என் பொருட்டே

உனது காலத்தை என்னிடமே தந்தாய்

எனது காலம் என்னிடம்

வெறும் சொற்களை மட்டுமே தந்தது

கையாலாகாதவனாய் வாழ்வைக் கரைத்தவனாய்

உனது காலத்தை சுமக்க முடியாத வக்கற்ற வாலிபனாய்

வலி சுமந்து உன் முன்னே நடைப்பிணமாய் திரிகின்ற

எனக்காக இனி அழுவாயா அம்மா

உனது மகனுக்காக மட்டும் இனி அழு

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

பரி நிர்வாணம்

பகல் காட்சிகளைப் புறக்கணித்து

உறங்கும் இரவுகளில்

ஓசைகளற்ற உயிரின் நிசப்தங்களில் ஏறி

வெறிச்சோடிய மனதில் எழும் அதிகாலைக் கனவுகள்

அபத்தங்களைச் சொரிகிறது

மழைக்கோடுகள் மண்ணில் மோதி முறிகின்ற

தடதடக்கும் ஓசையை உதாசினப்படுத்தி உறங்கிய

நேற்றைய அதிகாலையிலும் கனவுக்குள் சஞ்சரித்திருக்கிறேன்

சிவப்பு நிறத்திலான இலைகளையுடைய

போதி மரத்தின் கீழ் சீடர்கள் புடை சூழ

சித்தார்த்தனுடன் இருந்தேன் இல்லையெனில்

அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன்

யாரும் சொற்களற்றிருந்தோம்

சீடர்கள் குருவின் குற்றேவலுக்குக் காத்திருந்தார்கள்

சித்தார்த்தன் உபதேசிக்கத் தொடங்கினான்

பஞ்சமா பாதகம் பற்றியதாகவே அது இருந்திருக்க வேண்டும்

காமத்தை ஒழி என்ற சித்தார்த்தனின் கருத்துக்களுக்கிடையே

வன் புணர்ச்சியில் ஒரு பெண் கதறிக்கொண்டிருந்தாள்

சீடர்களில் ஒருவன் இடையில் எழுந்து சென்றிருந்தான்

சிவப்பு நிறத்திலான போதிமரத்தின் இலைகள்

என் மடிமீது சொரிந்து கொண்டிருந்தது

சித்தார்த்தனின் நீண்ட பிரசங்கம்

பரி நிர்வாணம் பற்றியதாக அமைந்தது

உபதேசத்தின் முடிவில் சீடர்கள் என் ஆடைகளை

உரிந்தனர்

கைகளையும் கண்களையும் கட்டினர்

பரி நிர்வாணம் அடைந்தேன்

அப்போது சித்தார்த்தன் கொல்லாமை பற்றி

உபதேசிக்கத் தொடங்கியிருந்தான்

இலைகளெல்லாம் சொரிந்து விட பரி நிர்வாணமாகியது

போதிமரம்

கனவில் தப்பி விழித்தெழுந்தேன்

காலை ஒன்றுக்காக ஆடைகளை அவிழ்த்து

பரி நிர்வாணத்திற்குள் மூழ்கிக்கொண்டிருந்தது இரவும்.

இராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் 1

ஆயிரத்துக்கும் மேற்றபட்ட

முரண்பாடுகளுக்கு இடையேயும்

ஏதோ ஒன்றில் குறைந்த பட்சம்

நட்பில் நிலைத்து விட்ட

இராணுவ நண்பனுக்கு

உன் மீது வெறுப்புகள் இருந்த போதும்

உன் தொடர்புகளற்ற காலத்தில்

உனக்கும் சேர்த்ததாகவே இருந்தது

என் அஞ்சலி

எனினும் இப்போது

நீ இருக்கிறாய் என்றறிந்திருக்கிறேன்

கொலைக்களைப்புகள் நீங்கி

உனது பிண முகம் மாறி

ஆளற்ற பொட்டல் வெளிகளில்

வனாந்தரங்களை வெறித்தபடி

இப்போது அரண் ஒன்றில் தனித்திருப்பாய்

அர்த்தமற்ற இலக்குகள் மீது

அப்போது நீ நீட்டிய துப்பாக்கியின் குறி

இப்போது வெட்கத்தில் தலை கவிழ்ந்து

நிலத்தில் உறைந்திருக்கும்

வெறுமைகள் சூழ்ந்த பெரு வெளி

உனக்குள் வினாக்களை

மட்டுமே தோற்றுவிக்கும்

உனக்கு குறி பார்க்க இனி யாருமில்லை

என்ற நிலையிலும் கூட

துப்பாக்கியுடன் இருப்பதே

உனது விதியாயிற்று

இராணுவ நண்பா

எல்லாம் முடிந்தாயிற்று என

பெருமூச்செறிந்திருப்பாய்

உனது மனச்சாட்சியின் கிளைகளில்

இப்போது துளிர்கள்

அதனால் உன்னை ஒன்று கேட்கிறேன்

நீ போரில் சாதனைகள் படைத்திருப்பாய்

குறி பார்த்து சுட்டிருப்பாய்

செல் மழையில் தப்பியிருப்பாய்

முன்னரண்களைத் தகர்த்திருப்பாய்

எதிரிகளை வீழ்த்தியிருப்பாய்

இவைகள் எனக்கு புதிதல்ல

இவற்றில் எனக்கு உடன்பாடுமல்ல

உனக்குள் சொல்ல முடியாமல்

குடைந்து கொண்டிருக்கும் சாதனைகளையே

அறிய விரும்புகிறேன்

என் பெண்களின் எத்தனை

சட்டைகளை கிழித்தாய்

உன் துப்பாக்கியில் விழும்

வெற்றுத் தோட்டாக்களைப் போல்

எனது எத்தனை அப்பாக்கள்

மண்ணில் வீழ்ந்தார்கள்

உன் செயல் பொருட்டு கதறியழுத

அம்மாக்கள் எத்தனை பேர்

என்னைப்போன்ற எத்தனை பேருக்கு

ஆண் குறிகளை வெட்டினாய்

நீ குண்டுருவிப் போட்ட

வீடுகளின் கணக்கென்ன

இவைகளுக்காக செலவழித்த

துப்பாக்கி ரவைகளை

எந்தக்கணக்கில் சேர்த்தாய்

இராணுவ நண்பா

இன்னும் ஒன்றைக் கேட்கிறேன்

ஆடைகளை உரிந்து

கைகளோடு கண்களையும் இறுகக்கட்டி

முழங்கால்களில் இருக்க வைத்து

புற முதுகில் மண்டைகளில் சுடத்துணிந்த

உன் சுட்டுவிரல் கணம் ஒன்றில்

உன் மனம் என்ன சொல்லியது

இல்லையெனில்

வெடிபட்டு வீழ்ந்தவர்கள்

புழுபோல சுருண்டு ஆவி பறி போகுமுன்பு

வாய் நிறைய ஏதோ

முணு முணுத்துப் போயிருப்பர்

மனச்சாட்சி உனக்கிப்ப வந்திருந்தால்

எனக்கு அதையாச்சும் சொல்லி விடு

சூரியனின் மரணதுள் புதைந்தது உலகு

சூன்யத்துள் மூழ்கி

இருட்டை அப்பிக்கொண்டது பகல்

சூரியனின் மரணதுள் புதைந்தது உலகு

தடுக்கி விழுந்த மனங்களை

பொருத்திக்கொண்டனர் மனிதர்கள்

பேய்களைப் புணர்ந்தது வானம்

நிணக்காற்றில் நீந்திக்கொண்டிருந்த

வலுவற்ற உடலால்

சூரியனையைச் சுமந்து

இருட்டோடு இருட்டாக

சுடலையில் புதைத்தனர்

தம்மையும் சேர்த்து

சூரியனை புதைத்த பின்னும்

அதில் பலர் பேசிக்கொண்டனர்

நாளை விடியுமென்று...

 
◄Design by Pocket