முன்பு முப்புரம் எரித்த
மூத்த கதைகளுக்குள்
இற்றுவிட்ட சுவடிகளில்
இன்னும் உலவித் திரிகின்ற
மூலத்தின் திருவுருவே
எங்கள் முதுகுகள்
எரிந்த போதும் உன்
எக்கண்ணும் திறக்கவில்லை
ஓர் அசுரன் வந்துவிட்டால்
வில்லோடும் விடக்கணையோடும்
மண்மீது பிறப்பாயென்று
மாகதைகள் சொல்வதுண்டு
கொடுவெளியில் எம்மக்கள்
ஒன்றற்ல இரண்டல்ல
காலிழந்து கையிழந்து
குறையுயிரைக் காப்பதற்கு
பல்லாயிரம் பேர் கூவியழைத்தும் நீ
வில்லோடு பிறக்கவில்லை
உன் தாயென்ன மலடா
இல்லை கருத்தடைதான் செய்தாளா
மழைபொழிய கோவியர்க்கு
மலை பெயர்த்து குடைபிடித்த
உன் பெருங்கைகள்
வீடின்றி மரத்தின் கீழ்
கூடார ஓட்டைகளில்
மழை ஒழுகி வழிந்த போது
குடைகொண்டு நீழவில்லை
தேவர்களின் குரல் கொண்டு
எமக்கழவுந் தெரியவில்லை
மானிடர்கள் சொல்லிவைத்த
மயிராண்டிக் கதைகளுக்குள்
தூக்கம்கலையாது தூங்குகிறாய்
அது நிற்க...
மூலத்தின் பராபரமே…!
உன் படைப்பில் உள்ளது போல்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்திழைத்தேன் என் பெருமான்
உன் கணக்கில் சொல்லாத எங்கும் இல்லாத
ஈழத்தமிழர் எனும்
ஈனப்பிறப்பொன்றை எமக்கு
எங்கிருந்து
ஏனளித்தாய் சொல்லு….?
0 comments:
கருத்துரையிடுக