இருத்தல் என் சுதந்திரம்

புதன், 17 நவம்பர், 2010

பாடைவரை படருகிற ஊர் நினைவு

புதன், 17 நவம்பர், 2010
ஊரே பெரு நிலமே

ஒப்பில் தாய் முலையே

உருப்பட்ட காலமொன்றை

எனக்கீந்த உயிர்ச்சுரப்பே

கிளட்டுவத்துள் தீர்ந்துவிடும்

வாழ்வினுக்கப்பாலும்

நீர்க்கமற நிறைந்து விட்ட

பெருந்தரையே

பாடை வரை உன்னினைவில்

ஊனுருகி உறுப்புகளில்

உயிர் பிதுங்கி வளிந்தொழுக

காலமெலாம் உனை

கவி எழுதிச் சாவதற்கா

என்னை நான்கைந்து சொற்களுடன்

உன்மீது பிறக்க வைத்தாய்

பாதாளம் வரை படர்ந்த

உன் கூடாரச் சிறகுகளுள்

தெய்வத்துள் பேய்களுள்

பெருவெறியர் கூட்டத்துள்

வாழும் தைரியத்தை உருட்டியெடுத்ததொரு

மனங்கொண்டு உருப்பட்டேன்

அண்டபகிரண்டம்

ஆட்களற்ற பெருவெளியும்

அகல வாய் திறந்து பரந்து கிடக்கையிலே

கற்கால வேடுவர்கள் வாழுகின்ற இத்தீவில்

உன் பொன்னிலத்தின் துண்டத்தை

பொருத்திவிட ஏன் துணிந்தாய்

இத்தீவில் உன்னுடம்பு

ஒட்டாமல் போயிருந்தால்

நானும் வந்திங்கு பிறப்பேனா

இன்பமே மயமென்று

பிரபஞ்சம் வழிகையிலே

அள்ளிப்பருக துளியும் மனமின்றி

என் வாலிபத்தை பெருவலியில் கரைப்பேனா

கடல் சூழ களனி வயல் காடு மலையென்று

பார்த்தவரை மலைக்க வைக்கும்

ரம்மியத்தில் நீயிருந்தால்

மண்பறிக்கும் சாதியிலே

வந்துதித்த பெருங்குடிதான்

உன்னைச் சும்மாதான் விடுவாரா

இல்லை கைதூக்கித் தொழுவாரா

தொடர் கணையில் எரித்து விட்டார்

சுடுகாடாய் மாற்றிவிட்டார்

எம்மைத் துரத்தி விட்டார்

அம்மா புதைத்த எந்தன்

தொப்புள் கொடியுந்தன்

மேனியிலே அறுகாகிப் படராதா

மூக்கு வாய் வழி புகுந்த

பூ மணக்கும் உன் புழுதி

நுரையீரல் சவ்வுகளில்

சுவராக எழும்பாதா

புனிதரின் கால் நடந்த

உந்தன் பொன்மேனி இன்று

பூதங்களின் கால் படர்ந்து

பேயுறைந்து கிடக்கிறது

மடி நிறையப் பிள்ளைகளை

பெற்று வைத்த உன் பிழைப்பு

இன்று மலடுகளைப் புணர்ந்த படி

மல்லாக்கப் படுக்கிறது 

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket