வீழ்ந்து விட்ட பின்னாலும்
இருந்தென்ன இனியென்ற
இறுதிநிலை வந்தெய்து
சாவோடு துணியாத
போக்கனத்து வாழ்வதனுள்
சலித்துயிர்த்து இன்னும்
நாமும் இருக்கின்றோம் என்பதுவாய்
நீமட்டும் மாறாமல்
வாசலிலே வாய் நிறைய
பால் சொரிந்து வந்து நின்று
காய்கின்றாய் பெரு நிலவே
முன்பொருநாள் பால் வெளியில்
நீ பாத்திருந்த வேளையில்தான்
பாவியர்கள் கணையெறிந்து
பாட்டனும் அறியாத பாட்டன்கள்
வாழ்ந்து விட்டுப் போனதொரு
எங்கள் பொன்னகரை எரித்ததனை
நீ மட்டும் சாட்சியென
பாத்திருந்தாய் பெருநிலவே
நாய்களைப் போல் சாமத்திலே
நிலம் பிரிந்து போனதுவும்
ஊரெரிந்த கரும்புகையில்
உன் பால் வீதி கறுத்ததுவும்
எனக்கின்னும் நினைவுண்டு
நீ மட்டும் மறப்பாயா
வெண்ணிறத்தின் கூடாரம்
ஓரிடமாய்த் தரித்து நிற்க
கூடார வாசலிலே மல்லாக்கப் படுத்திருந்து
வாழ்வழிந்த பெருவலியை
கடைக்கண்ணில் கசிய விட்ட
அகதி முகாம்வாசலிலும்
வஞ்சகமே இல்லாமல்
நீ சொரிந்தாய் பெரு நிலவே
அனல் மின்னை ஆக்குதற்கு
ஆட்களற்ற வெளியிருக்க
தொன்மத்துள் வாழ்ந்து வந்த
தொல்குடியை நாய்களைப் போல்
நாலாண்டாய் நடுத்தெருவில் துரத்தி விட்டு
மின்சாரம் செய்கின்ற
பாவிகளைக் கண்டதுண்டா
பாவியர்க்கு நீ இரவில் பொழிகின்ற
பால் ஒளிதான் போதாதோ
ஆட்களற்ற திசையெல்லாம்
பார்த்து வரும்பெரு நிலவே
எங்களது திருநாட்டில்
நடக்கின்ற பெருங்கூத்தை
எங்கேனும் கண்டதுண்டா
கண்டு வந்து சொல்லாயா
மாறாது மறையாது என்றெல்லாம்
மனதுள்ளே பூட்டி வைத்த
எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்
நீ மட்டும்மாறாது வந்துதித்தாய்
பெரு நிலவே
மாறாத எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்
நீ மட்டும் மாறாது
வந்துதித்து என்ன பயன்
செத்தழியா காலத்துள்
சீரழிந்த வாழ்வதனை
விட்டகலும் மாயத்தை
அறியாமல் தவிக்கின்றோம்
இரக்கத்தின் குணமொன்று
உனக்கிருக்கும் என்றாகில்
உன் பால் ஒளியில் படு விசத்தை
கலந்தெம்மில் ஊற்றிவிடு
வக்கிழந்த வாழ்வழிந்து
பரபதத்துள் மூழ்கட்டும்
(சம்பூர் என்ற எனது கிராமம் யுத்தத்தில் பறித்தெடுக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாகி இன்று அனல் மின் நிலையம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 4 வருடங்களாக நாங்கள் அகதிக் கூடாரத்னுள்ளே வாழ்வை கழிக்கின்றோம்
1 comments:
அண்ணா! நீண்ட நாட்களின் பின்னர் உங்களின் கவிதை வாசிக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி!!
பாரதத்தில் வைரமுத்துவின் ஊர்!! (வைகையிலே ஊர் முழுக...)
ஈழத்தில் சுயந்துவின் ஊர்!
கருத்துரையிடுக