இருத்தல் என் சுதந்திரம்

செவ்வாய், 9 நவம்பர், 2010

தீபத்தைத் தின்னும் நரவதம்

செவ்வாய், 9 நவம்பர், 2010

நரவதத்தின் ஒப்பனைகளுள்

மூழ்கியது தீபாவளிக்காலம்

அடம்பிடித்த தங்கையின் கன்னத்தில்

உப்பாகிக் கரைந்தது புதுச்சட்டை

எட்டாத தூரத்தில் வெடித்து

அகதிக்கூடாரத்தின் கூரையில்

சாம்பல் படிய

தூர்ந்து போன பதுங்குகுழிக் காலத்தை

எண்ணும்படி அதிர்ந்தது

யாரோ விட்ட புஸ்வாணம்

இழந்து போன ஊருக்காகவும்

இன்னும் பலதுக்குமாய்

அகதி வாசலில் சிப்பியில்திரியிட்டு

நரகாசூரனைப் புனைந்து கொண்டிருந்தாள் அம்மா

இம்முறையும் தீபாவளி

ஊரில் ஒளிராமல் போன

அப்பாவித்தனமான ஏமாற்றத்தில்

மோட்டில் உறைகிறது

அப்பாவின் முதுமை எண்ணங்கள்

கடைக்கண் பார்வையற்றும்

கைவீசி நடக்கிறது காலம்

ஆயிரம் தீபங்களைத் தூர்த்தும்

அடியில் படிகிறது இருள்

ஆர்ப்பரித்து வெடித்து

அடங்கிச் சிதறிய பட்டாசிப் பேப்பர்களை

பொறுக்கிக் கொண்டாடினர் சிறுவர்கள்

நான் என்னைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்

தீபத்தைத் தின்றபடி

நரவதத்தின் ஒப்பனைகளைக் கலைத்து

வல்லிருளில் படிந்தது

சிப்பியில் அம்மா புனைந்த

நரகாசூரனின் அரூபநிழல்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket