நரவதத்தின் ஒப்பனைகளுள்
மூழ்கியது தீபாவளிக்காலம்
அடம்பிடித்த தங்கையின் கன்னத்தில்
உப்பாகிக் கரைந்தது புதுச்சட்டை
எட்டாத தூரத்தில் வெடித்து
அகதிக்கூடாரத்தின் கூரையில்
சாம்பல் படிய
தூர்ந்து போன பதுங்குகுழிக் காலத்தை
எண்ணும்படி அதிர்ந்தது
யாரோ விட்ட புஸ்வாணம்
இழந்து போன ஊருக்காகவும்
இன்னும் பலதுக்குமாய்
அகதி வாசலில் சிப்பியில்திரியிட்டு
நரகாசூரனைப் புனைந்து கொண்டிருந்தாள் அம்மா
இம்முறையும் தீபாவளி
ஊரில் ஒளிராமல் போன
அப்பாவித்தனமான ஏமாற்றத்தில்
மோட்டில் உறைகிறது
அப்பாவின் முதுமை எண்ணங்கள்
கடைக்கண் பார்வையற்றும்
கைவீசி நடக்கிறது காலம்
ஆயிரம் தீபங்களைத் தூர்த்தும்
அடியில் படிகிறது இருள்
ஆர்ப்பரித்து வெடித்து
அடங்கிச் சிதறிய பட்டாசிப் பேப்பர்களை
பொறுக்கிக் கொண்டாடினர் சிறுவர்கள்
நான் என்னைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்
தீபத்தைத் தின்றபடி
நரவதத்தின் ஒப்பனைகளைக் கலைத்து
வல்லிருளில் படிந்தது
சிப்பியில் அம்மா புனைந்த
நரகாசூரனின் அரூபநிழல்
0 comments:
கருத்துரையிடுக