ஒப்பில் தாய் முலையே
உருப்பட்ட காலமொன்றை
எனக்கீந்த உயிர்ச்சுரப்பே
கிளட்டுவத்துள் தீர்ந்துவிடும்
வாழ்வினுக்கப்பாலும்
நீர்க்கமற நிறைந்து விட்ட
பெருந்தரையே
பாடை வரை உன்னினைவில்
ஊனுருகி உறுப்புகளில்
உயிர் பிதுங்கி வளிந்தொழுக
காலமெலாம் உனை
கவி எழுதிச் சாவதற்கா
என்னை நான்கைந்து சொற்களுடன்
உன்மீது பிறக்க வைத்தாய்
பாதாளம் வரை படர்ந்த
உன் கூடாரச் சிறகுகளுள்
தெய்வத்துள் பேய்களுள்
பெருவெறியர் கூட்டத்துள்
வாழும் தைரியத்தை உருட்டியெடுத்ததொரு
மனங்கொண்டு உருப்பட்டேன்
அண்டபகிரண்டம்
ஆட்களற்ற பெருவெளியும்
அகல வாய் திறந்து பரந்து கிடக்கையிலே
கற்கால வேடுவர்கள் வாழுகின்ற இத்தீவில்
உன் பொன்னிலத்தின் துண்டத்தை
பொருத்திவிட ஏன் துணிந்தாய்
இத்தீவில் உன்னுடம்பு
ஒட்டாமல் போயிருந்தால்
நானும் வந்திங்கு பிறப்பேனா
இன்பமே மயமென்று
பிரபஞ்சம் வழிகையிலே
அள்ளிப்பருக துளியும் மனமின்றி
என் வாலிபத்தை பெருவலியில் கரைப்பேனா
கடல் சூழ களனி வயல் காடு மலையென்று
பார்த்தவரை மலைக்க வைக்கும்
ரம்மியத்தில் நீயிருந்தால்
மண்பறிக்கும் சாதியிலே
வந்துதித்த பெருங்குடிதான்
உன்னைச் சும்மாதான் விடுவாரா
இல்லை கைதூக்கித் தொழுவாரா
தொடர் கணையில் எரித்து விட்டார்
சுடுகாடாய் மாற்றிவிட்டார்
எம்மைத் துரத்தி விட்டார்
அம்மா புதைத்த எந்தன்
தொப்புள் கொடியுந்தன்
மேனியிலே அறுகாகிப் படராதா
மூக்கு வாய் வழி புகுந்த
பூ மணக்கும் உன் புழுதி
நுரையீரல் சவ்வுகளில்
சுவராக எழும்பாதா
புனிதரின் கால் நடந்த
உந்தன் பொன்மேனி இன்று
பூதங்களின் கால் படர்ந்து
பேயுறைந்து கிடக்கிறது
மடி நிறையப் பிள்ளைகளை
பெற்று வைத்த உன் பிழைப்பு
இன்று மலடுகளைப் புணர்ந்த படி
மல்லாக்கப் படுக்கிறது