வக்கிரம் சூழ்ந்து கொள்ள
வன்னிப் பெருநிலத்தின் உக்கிரம்
குறைந்துகொண்டிருந்தது
நிணத்தின் நெடி படர்ந்த சினிக்காற்றைக் கிழித்து
இருட்டறைந்த தெருக்களில்
முடிவுத்தடங்களைப் பதித்தபடி உருண்டுகொண்டிருந்தன
விளக்கற்ற குருட்டு வாகனங்கள்
சத்தியங்களின் சிதைவில் அசாத்தியங்கள் நிகழ
ஈனத்தின் குரல்கள் மங்கி
விழுப்புண்களில் விறைத்தது பெருநிலம்
வந்தவர் தத்தம் பணி முடித்துப் போய்கொண்டிருந்தனர்
தீர்க்கப் போகும் கடைசி வேட்டுக்காக
ஒரு தமிழனின் துப்பாக்கி காத்துக் கிடந்தது
சபதங்களிலான பீஷ்மரின் அம்புப்படுக்கையில்
அதே சபதங்களால் பலர்
துரோகங்களின் நாறிய வாய்க்குள்
சரித்திரம் சரிந்து கொண்டிருந்தது
நாளைக்கான சகுனங்களற்றிருந்தன
போராடிக்களைத்து சாக்குறி தரித்த முகங்கள்
எக்கிய வயிறும் ஏறிட்ட பல்லுமாய்
பதுங்கு குழிகளுள் உறைந்து போயிற்று மனிதம்
இதுவரை நிகழாததும் இனி நிகழப்போகாததுமான
பெருவலியைச் சுமந்து
உப்பிப்பெருத்து சீழ் வடிந்த காயங்களில்
புழுவாய் நெளிந்தது சுதந்திரம்
மௌனங்கள் இறுகிய இரவு கழிந்து
ஒரு வரலாற்றை சப்பி ஏவறை விட்டபடி
இன்னுமொரு காலையை பிரசவித்தது காலம்
ஊமையாய் விடிந்த காலையின் நிசப்தங்களினூடே
அங்கொன்றுமிங்கொன்றுமாய்க் கேட்ட
துப்பாக்கி வேட்டுடன் அடங்கிற்று ஒரு வரலாறு
தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுள் ஏதோ ஒன்று
தமிழன் ஒருவனின் கடைசி வேட்டொலியாகவும்
வீரம் வீழ்ந்ததன் சமிக்ஞையாகவும் இருந்திருக்கும்.
0 comments:
கருத்துரையிடுக