இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 14 அக்டோபர், 2010

வன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்

வியாழன், 14 அக்டோபர், 2010

வக்கிரம் சூழ்ந்து கொள்ள

வன்னிப் பெருநிலத்தின் உக்கிரம்

குறைந்துகொண்டிருந்தது

நிணத்தின் நெடி படர்ந்த சினிக்காற்றைக் கிழித்து

இருட்டறைந்த தெருக்களில்

முடிவுத்தடங்களைப் பதித்தபடி உருண்டுகொண்டிருந்தன

விளக்கற்ற குருட்டு வாகனங்கள்

சத்தியங்களின் சிதைவில் அசாத்தியங்கள் நிகழ

ஈனத்தின் குரல்கள் மங்கி

விழுப்புண்களில் விறைத்தது பெருநிலம்

வந்தவர் தத்தம் பணி முடித்துப் போய்கொண்டிருந்தனர்

தீர்க்கப் போகும் கடைசி வேட்டுக்காக

ஒரு தமிழனின் துப்பாக்கி காத்துக் கிடந்தது

சபதங்களிலான பீஷ்மரின் அம்புப்படுக்கையில்

அதே சபதங்களால் பலர்

துரோகங்களின் நாறிய வாய்க்குள்

சரித்திரம் சரிந்து கொண்டிருந்தது

நாளைக்கான சகுனங்களற்றிருந்தன

போராடிக்களைத்து சாக்குறி தரித்த முகங்கள்

எக்கிய வயிறும் ஏறிட்ட பல்லுமாய்

பதுங்கு குழிகளுள் உறைந்து போயிற்று மனிதம்

இதுவரை நிகழாததும் இனி நிகழப்போகாததுமான

பெருவலியைச் சுமந்து

உப்பிப்பெருத்து சீழ் வடிந்த காயங்களில்

புழுவாய் நெளிந்தது சுதந்திரம்

மௌனங்கள் இறுகிய இரவு கழிந்து

ஒரு வரலாற்றை சப்பி ஏவறை விட்டபடி

இன்னுமொரு காலையை பிரசவித்தது காலம்

ஊமையாய் விடிந்த காலையின் நிசப்தங்களினூடே

அங்கொன்றுமிங்கொன்றுமாய்க் கேட்ட

துப்பாக்கி வேட்டுடன் அடங்கிற்று ஒரு வரலாறு

தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுள் ஏதோ ஒன்று

தமிழன் ஒருவனின் கடைசி வேட்டொலியாகவும்

வீரம் வீழ்ந்ததன் சமிக்ஞையாகவும் இருந்திருக்கும்.

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket