இருத்தல் என் சுதந்திரம்

சனி, 9 அக்டோபர், 2010

கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்

சனி, 9 அக்டோபர், 2010
கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்

கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்

தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்

தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்

உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விழித்து விட்டேன்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket