தீனி பொறுக்கத் தெரியாத
குயில் குஞ்சொன்றை
அண்டங்காக்கைகள் முற்றத்தில்
கொத்திக் கிழித்த போது அழுது முடித்திருந்தேன்…
காக்கையின் கூட்டில்
குயில்முட்டையிடுவதாயும்
காக்கையின் சூட்டில்
குயில் குஞ்சு பொரிப்பதாயும்
பின்னாளில் அறிந்து கொண்டேன்..
ஒரு காலைப் கொழுதில்
இடைவெளியற்றிருந்த எங்கள் வீட்டின் கூரையின்
நெருக்குவாரங்களை நீக்கி
சின்ன இடைவெளியில்
வெள்ளைப் புறா ஒன்று
கூடு கட்டியதாய் ஞாபகம் எனக்கு..!
தீனி பொறுக்கச் செல்லும்
மாலை கூடு திரும்பும்
அழகான அந்த வெள்ளைப் புறாவின்
வாழ்கையை சில நாட்களேனும்
ரசித்ததாய் எனக்குள் ஒரு உணர்வு
சில காலம் புறா
தீனி பொறுக்கச் செல்லாத கவலையில்
மேசைகளை அடுக்கி
ஒரு நாள் எட்டிப் பார்த்தேன்
மூன்று முட்டைகளை அடைகாத்திருந்தது புறா…!
சில காலம் கழிக்க
குஞ்சுகளின் கீச்சொலி கேட்டு
மீண்டும் கூட்டை எட்டிப் பார்த்தேன்
இட்டதென்னவோ புறா முட்டைதான்
பொரித்துக் கிடந்தன
பாம்பொன்றும்;;;;…..பருந்தொன்றும்…பச்சோந்தியொன்றும்.
வன்முறையற்ற வெள்ளைப் புறா
காக்கை போல் குஞ்சுகளை
கொத்திக் கிழிக்காமல்
பறந்து போயிருந்தது கூட்டை விட்டு….
நேற்று
மேசைகளை அடுக்கிகூட்டை உற்றுப் பார்த்தேன்
என்னைப் பய முறுத்திய படி
மூன்று முட்டைகள்.
0 comments:
கருத்துரையிடுக